தமிழ்க்கடவுள் தரிசனங்கள்

இந்து மதம் தன்னுள் பல்வேறு விதமான தத்துவ புதையல்களை ஒளித்து வைத்திருக்கிறது. மிகச்சரியாக அந்த புதையல்களை கண்டெடுத்தவர்களைத்தான் நாம் ஞானிகள் என்று கொண்டாடி வருகின்றோம். அற்புதமான சிந்தனைகளை செறிவுமிக்க தத்துவங்களை சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்காகவே அவைகள் கதைகள் வடிவத்தில் சொல்லப்பட்டன.

பழம் கிடைக்காது போன சாதாரண விஷயத்திற்கு யாராவது கோபப்படுவார்களா? என்ன சொல்கிறது சேவற்கொடியோன் கதை?
ஞானம் அடைதலின் இரண்டு வழிகளை அந்த நிகழ்வு அடையாளம் காட்டுகிறது. அம்மையும் அப்பனுமாய் இருக்கின்ற இடம் விட்டு நகராது பிரம்மச்சரியம் காத்து இறையோடு இணைந்து நிற்றல் பிள்ளையார் வழி. உலக விஷயங்களில் உழன்று, உலக விஷயங்களை சுற்றி வந்து அனுபவித்து, பின் இறைத்தேடலில் ஞானம் கேட்டு வரும்போது ஒரு மெல்லிய பிணக்கு அங்கே வருகிறது. இது இப்போது உனக்கு வேண்டாம், உள்ளே விஷயக்குவியல் இருக்கிறது. ஓடு, தனியே ஓடு, குன்று தேடி நில். உற்று, உற்று உள்ளே பார்த்து அவற்றில் இருந்து விலகி நில். தவம் செய். நீ ஞானத்தை தேடி எங்கேயும் ஓடவேண்டியதில்லை. அந்தப் பழம் – ஞானப்பழம் நீயே. நீயே அதுவாகி மலர்ந்து நிற்பாய். இதுதான் முருகக்கடவுளின் கோபம் கூறும் செய்தி.

சரி, அந்த அறுபடைநாயகன் இரு தாரம் கொண்டிருக்கிறாரே, இதற்கென்ன பொருள்?

தெய்வானை இந்திரனின் மகள்; தேவ அம்சம். வானவர் உறவு; உயர்ந்த நிலையை அளிக்கும் தத்துவம். வள்ளி என்பது பூமியின் உறவு. சாதாரணர்க்கும் தெய்வ சங்கமம் கிடைக்கும் நிகழ்வு. கடவுள் தன்மையை, உயர் யோகநிலையை அளிப்பவர் மட்டுமல்ல.. இவ்வுலக வாழ்க்கைக்கு தேவையான பலத்தையும்… யோகத்தை மட்டுமல்லாது போகத்தையும் அளிப்பவராக இருக்கிறார் நம் கந்தக்கடவுள். விண்ணுலகம் செல்லும் வீடுபேற்றை மட்டுமல்ல.. மண்ணுலக இன்பங்களையும் அளிக்க வல்லவர் நம் வள்ளிமணாளன். இதை உணர்த்தும் தத்துவமே இருதாரமோடு நிற்கும் நிலை.

தமிழ்க்கடவுளைப் பற்றி மேலும் கொஞ்சம் சிந்திப்போம். தீயவர்களை, அசுரர்களை அழித்ததற்கான பரிசாக முருகருக்கு தெய்வானை கிடைத்தார். தீய குணங்களை அழிக்க, அழிக்க தேவநிலை துணைவரும் என்ற செய்தி அதில் ஒளிந்துள்ளது. ஆனால், மண்ணில் வாழ, பொருள் வசதி பெருக, கஷ்டப்பட வேண்டும். முயற்சி செய்யவேண்டும். அதற்கு இறையின் துணையும் வேண்டும். முயற்சியும் இறைத்துணையும் அருகிருந்து போராட வெற்றி கிடைக்கிறது.

உலகியல் வாழ்விற்கான வெற்றியைத் தருபவள் வள்ளி. வள்ளி என்பதன் சூட்சுமம் இதுதான். வள்ளி என்பது இவ்வுலக வெற்றி. தெய்வானை என்பது அவ்வுலக வெற்றி. இரண்டையும் அடைந்து, இரண்டையும் தருபவர் நம் வேலவர். சரி, சேவற்கொடி எதற்கு? அதற்கென்ன பொருள். சேவல் -இவ்வுலக மாந்தர் விழிக்க குரல் கொடுக்கும் பறவை. விடியலைக் கொண்டாட அழைப்பு விடும் பறவை. உள்ளே உன்னித்து உன்மத்தம் பெறாது, தியானநிலை அடையாது, வெறுமனே உறங்குகின்ற மனிதர்களை எழுந்திருங்கள்; எழுந்திருங்கள்; எழுந்து உள்ளே விழிப்படையுங்கள் என்று அழைக்கும் விதமாக சேவற்கொடி. பாம்பும், மயிலும், வேலும் என்ன சொல்கின்றன? உள்பொங்கும் சக்தியின் விழிப்பு நிலை பாம்பு. யோகவழி பயணிக்க, பயணிக்க முகம் பொலிவுறும்; சிறப்பை கூற மயில். தவிர, ஆசன வகைகளில் ஒன்றான மயூராசனத்தின் சிறப்பையும் அது உணர்த்துவதாக உள்ளது. மயூராசனம் என்பது கைகளின் வழியே உடலை தாங்கும் நிலை. இந்த ஆசனம் உள்ளுறுப்புகளை பலப்படுத்துவதோடு, குண்டலினி சக்தி விழிப்படையவும் உதவியாக இருக்கிறது. குண்டலி விழிப்பால் தன்னைப் பற்றிய அறிவு மிகைப்படுகிறது. தன்னைப் பற்றிய கவனம் அதிகமாகிறது. செயல்களில் தெளிவும், பேச்சில் நிதானமும் ஏற்படும். மயிலாசனத்தின் செய்தி இதுவே.

‘எப்போதும் எப்போதும் உன்னுள்ளே தீயவை அகற்றும் பணியை செய்து கொண்டிருக்க சத்தியம் எனும் வேலை துணையாக வைத்திரு’ எனும் செய்தியை சரவணகுமரனின் வேல் உணர்த்திக்கொண்டே இருக்கிறது. அவரின் படைவீடுகள் அமைந்திருப்பது அசுரரை அழிக்க மட்டுமல்ல.. திசைதோறும் நின்று பக்தர்களை துரத்தும் துன்பங்களை நீக்கவும்தான். இந்த ஆறு படைவீடுகளை முழுமையான இறைநினைப்போடு தரிசித்தவர்கள் முருகக்கடவுளின் அருள் நிரம்பப் பெற்று வீடுபேறு அடைவார்கள். விதியினை வெல்வார்கள். காலத்தை ஊடுருவும் கலைகள் எல்லாம் கைவரப்பெறுவார்கள். மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞா என்னும் ஆறு சக்கரங்களின் இருப்பை தன்னுள் தரிசித்து ஏழாவதாய் இருக்கும் சகஸ்ரார சக்கரத்தை தொடுவார்கள்.

இவை மட்டுமல்ல.. வேலவன் பிரணவமந்திரத்தின் பொருள் உணர்த்தும் தேவன். ஓமென்று உள் நின்ற உத்தமர்க்கெல்லாம் ஓடி வந்து உடன் உதவிடும் நாதன். வேண்டி நிற்பது எதுவாயினும் விரைந்து கொடுக்கும் குமரக்கடவுள். அபயம் என்றே அவனை நம்பி அனுதினமும் ஆறெழுத்தை ஜபிப்போர்க்கு அன்பனாய், நண்பனாய் வந்து நன்றாய் அருளிடும் அறுமுகத்தான். எண்ண எண்ண இன்னும் ஏராளம் உண்டு நம் அழகனின் பெருமைகள். இவை உணராமல் வாதம் செய்து, பிறவிகள் வளர்ப்போரை, பிணிக்கண்டு தவிப்போரை விட்டுத்தள்ளுவோம். இந்து மதம் கூறும் இனிய தத்துவங்களை, அதன் ஆழங்களை, சூட்சுமங்களை சிந்திக்கத் தலைப்படுவோம். வானத்தை, பூமியை, நட்சத்திரங்களை, கோள்களை, இப்பெரிய பிரபஞ்சத்தை, இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கும் மகத்தான சக்தியை ஏதேனும் ஒரு பெயரில் நித்தம் நித்தம் வணங்கி நின்றிடுவோம். வழிகாட்டக் கோரிடுவோம். ஓம். சரவணபவ ஹ்ரீம். ஓம்!

About The Author

1 Comment

  1. இரா.அ.பரமன் (அரோமணி)

    இந்து மதம் எத்தனை தத்தவப் புதையல்களை வைத்திருந்தாலும் மக்களின் வாழ்க்கை தரம், ஒழுக்க நெறி உயரவில்லையே! அந்த தத்துவங்கள் மக்களுக்கு மனக்கட்டுப்பாட்டை கொண்டு வரவில்லையே! அறியாமையைப் போக்கவில்லையே! நல்லாட்சிகளைக் கொண்டுவரவில்லையே! மக்களின் துயரம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதானே போகிறது! இந்துக்களே வேதம் சொன்னதை பின்பற்ற வில்லையே! ஒரு பக்கம் செய்த பாவத்திற்கு தண்டனை அநுபவித்தே ஆக வேண்டும் என்று பகவத் கீதை சொல்லுகிறது. இன்னொரு பக்கம் பரிகாரம் செய்து தண்டனையில்லாமல் செய்து விடலாம் என்று மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள். இதனால் இந்து மதம் ஒரு மதமா அல்லது பல மதங்களா என்ற குழப்பம் ஏற்படுகிறது.!

Comments are closed.