கவின் குறு நூறு-25

74

கவின் சாப்பிடும் வேளையில்
சன்னலோரம் வரும் காக்கை
விருந்தாளிகளின் கவலை –
தங்கள் குரல் அவனுக்குப்
பிடித்திருக்கிறதோ? இல்லையோ?
என்பதுதான்.

75

கடற்கரையில் சிலைக்குள் இருக்கும்
காந்தியண்ணலின் விருப்பங்கள் –
கவின் கையைப் பிடித்துக் கொண்டு கொஞ்ச தூரம்
நடக்க வேண்டும்;
வேர்க்கடலை வாங்கி அவனோடு
கொஞ்சம் கொறிக்க வேண்டும்;
வீட்டுக்குக் கவின் திரும்பியதும்
திரும்பிவிட வேண்டும் சிலைக்குள்.

76

கடற்கரையில் பந்தை
மேலே எறிகிறான் கவின்.
நிலா கீழே வந்து விழுகிறது
கவின் கைகளில்.

About The Author