கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

சுட்ட சேதிகள் (சற்று வித்தியாசமானவை)

ஒரு காதல் மாளிகை கல்யாண மாளிகையாகிறது

ஷேக்ஸ்பியரின் பிரபலமான காதல் காவியம் ரோமியோ-ஜூலியட். இந்தக் காவியத்தின் நாயகி ஜூலியட் தன் காதலன் ரோமியோவிற்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்த மாளிகையின் உப்பரிகையில் இப்போது காதல் திருமணங்கள் நிகழ்த்த அனுமதிக்கப்படுகிறதாம்.

13ம் நூற்றாண்டில் இத்தாலியில் வாழ்ந்த காபிலோ குடும்பத்தைப் பின்னணியாகக் கொண்டு ஷேக்ஸ்பியர் தன் ரோமியோ-ஜூலியட் காவியத்தைப் புனைந்தாராம். இந்த (வசந்த) மாளிகையை பல்லாயிரக்கணக்கான காதலர்கள் உலகம் முழுவதிலுமிருந்து தரிசித்திருக்கிறார்களாம்.

இருந்தாலும் வாரண்ட், இறந்தாலும் வாரண்ட்

முன்னாள் கேரள முதலமைச்சர் ஈ.கே.நாயனார் மறைந்து ஐந்து ஆண்டுகள் ஆன போதிலும் அவர் மீது சமீபத்தில் ஒரு பிடி வாரண்ட், 2002ம் ஆண்டு மேகாலயாவில் ஒரு தடை உத்தரவை மீறியதற்காக பிறப்பிக்கப்பட்டது. சட்டரீதியாக, நாயனார் இறந்த சான்றிதழை கோர்ட்டில் இது வரை தாக்கல் செய்யாததுதான் இந்த பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டத‎ன் காரணமாம். நாயனார் மறைந்தது மே மாதம் 2004ம் ஆண்டு!

உள்ளதும் போச்சு!

லண்டனில் ஒரு டிவிடி ப்ளேயரைத் திருடிச் சென்ற திருடன் ஒருவன் மறந்து போய் விட்டு விட்ட ரிமோட்டை எடுத்துச் செல்ல வரும் போது டிவிடியும் கையுமாகப் பிடிபட்டானாம். சும்மாவா சொன்னார்கள், ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்று!

அன்று பிறந்ததும் அதே அறை! இன்று பிறப்பதும் அதே அறை!

புது டில்லி மருத்துவமனையொன்றில் ஒரே அறையில் பிறந்த இரு சீனப் பெண்கள், முப்பது ஆண்டுகளுக்குப் பின், அதே மருத்துவமனையில், அதே அறையில் ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார்கள்,1979ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ந்தேதி ஒரே அறையில் பிறந்த ஜாவோ ரீலிங், டூ டவ் என்ற இருவருக்கும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25ந்தேதி பிரசவம் நடந்திருக்கிறது. இவர்களுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர்கள் இது போல ஒரு தற்செயல் நிகழ்வை இதுவரை பார்த்ததில்லை என்று அதிசயிக்கிறார்கள். இவர்கள் இருவரும் தங்கள் குழந்தைகளை சகோதரர்களாகவே வளர்க்கப் போவதாக கூறியிருக்கிறார்கள்.

தலை வலியா? மாத்தி விடு மூச்சை..
(இணையத்தில் வந்த குறிப்பு)

நாம் சாதாரணமாக நாசியின் இருபுறங்ளையும் மூச்சு விட உபயோகிக்கிறோம். நாசியின் வலது பக்கம் சூரியனையும், இடதுபக்கம் சந்திரனையும் குறிக்கும்.

தலை வலிக்கும்போது வலது நாசியை மூடிக்கொண்டு இடது நாசியினால் மூச்சு விட்டால் ஐந்து நிமிஷங்களில் தலைவலி பறந்தே போச்சே என்று சொல்லலாமாம்.

களைப்பாக இருக்கும் போது இடது நாசியை மூடி வலது நாசியினால் சுவாசித்தால் மனம் புத்துணர்ச்சி பெறுவது நிச்சயம்.

செய்துதான் பார்ப்போமே!

சற்றே நகுக!

ஒரு கல்லறையில் இப்படி எழுதியிருந்தது:

"நாச்சிமுத்து – தோற்றம்:&&& மறைவு:###
அரசியல்வாதி
மிகவும் நேர்மையானவர்"

அதைப் படித்த பாமரனுக்கு ஒரு சந்தேகம் வந்தது.

"ஏன் மூன்று பேரை ஒரே கல்லறையில் புதைத்தார்கள்?"

About The Author