கிளியோபாட்ரா (49)

"கிளியோபாட்ரா இறந்துவிட்டாளா? எனக்கே எனக்காக வாழ்ந்து வந்த ஒரு ஜீவன் இந்த உலகத்தை விட்டே மறைந்துவிட்டதா? அன்பே… நான் சொல்லக்கூடாத வார்த்தைகளைக் கேட்டு இப்படியொரு முடிவை எடுத்து விட்டாயா? … இனி நான் என்ன செய்வேன். இனி நான் வாழ்ந்து என்ன பயன்? என் அரசியே… எனக்காக சொர்க்கத்தில் காத்திரு. இதோ நானும் வந்து விடுகிறேன்…" கிளியோபாட்ரா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் அறிந்த ஆண்டனி இப்படித்தான் புலம்பினான்.

"எனக்காக வாழ்ந்தவளே உயிரோடு இல்லாததால், இனி நான் உயிர் வாழ்வது அவமானம். நான் பேராசை கொண்டவன் என்று வரலாறு என்னைப் பழிக்கும். அதற்கு இடம் கொடுக்க மாட்டேன்…" என்று ஆண்டனியின் கடைசி நேர புலம்பலைப் படம் பிடித்துக் காட்டுகிறார் ஷேக்ஸ்பியர்.

கிளியோபாட்ரா உண்மையிலேயே இறந்துவிட்டாள் என்று நம்பிய ஆண்டனியும் உண்மையிலேயே சாகத் துணிந்துவிட்டான். அவனுக்கு அருகில் அப்போது நின்றிருந்த அவனது அடிமையான ஈராஸ் சற்று நடுங்கியபடியே நின்றிருந்தான்.

"ஏன் மவுனமாக இருக்கிறாய் ஈராஸ்? உன் தலைவியின் பிரிவை உன்னாலும் தாங்க முடியவில்லையா? உனக்கே இந்த நிலைமை என்றால், என் இதயத்தில் அவளுக்கு மட்டுமே கோவில் எழுப்பியுள்ள என்னால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும். அதனால், ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். அதற்கு நீதான் உதவ வேண்டும்".

"உதவியா..? நான் என்ன உதவி செய்யமுடியும்?"

"ஆமாம்! நீதான் எனது கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும்".

"என்னது… கடைசி ஆசையா? நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே என்னால் கணிக்க முடியவில்லை".

"உன்னை நீயே குழப்பிக் கொள்ளாதே ஈராஸ். இப்போதுதான் நீ தைரியமாக இருக்க வேண்டும். நான் சொல்வதைச் செய்ய வேண்டும். என் மரணம் உன் கையால் நிகழ வேண்டும்."

அதிர்ந்து போன ஈராஸ், "ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? நமது அரசியாரின் உடலை ஒருமுறை பார்த்த பின்னர் உங்கள் முடிவு பற்றி யோசிக்கலாமே…" என்றான்.

"இல்லை ஈராஸ்! என் கிளியோபாட்ரா இறந்துவிட்டாள் என்ற செய்தி என் காதில் எப்போது கேட்டதோ, அப்போதே நானும் இறந்து போய்விட்டேன். இப்போது உன்னிடம் பேசிக் கொண்டிருப்பது உயிரற்ற எனது உடல்தான்!"

"அவசரப்பட வேண்டாம், அரசே! தற்கொலை என்பது யாரும் யோசித்து எடுக்கும் முடிவு அல்ல. ஒரு சில நொடிகளில் தன்னையும் அறியாமல் எடுக்கப்படுகிற தவறான முடிவு. நமது தலைவிதான் அப்படியொரு முடிவை…" இதற்கு மேல் பேச ஈராஸ் சற்று சிரமப்பட்டான்.

"ஏன் சொல்ல வந்ததை விழுங்குகிறாய். இப்போது நீ சொல்லும் அறிவுரை கூட நான் கேட்கும் கடைசி அறிவுரை என்பதால்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்".

"தங்களுக்கு அறிவுரை சொல்கிற தகுதி என்னிடம் இல்லை. ஆனாலும், நடந்த சம்பவத்தைத் தீவிரமாக விசாரிக்கலாம் அல்லவா. அவர் இறந்ததற்கான காரணத்தைத் தெரிந்து கொண்டுவிட்டு, அதன்பின் தங்கள் முடிவு பற்றி யோசிக்கலாமே?"

"நிறுத்து! போதும் உன் அறிவுரை. இவ்வளவு நேரம் நான் உன்னுடன் பேசியதே பெரிய விஷயம். இதுவரை நீ சொன்ன உதவாத அறிவுரைகள் போதும். இனி நான் சொல்வதை எனது உத்தரவாக ஏற்றுச் செய்!"

"சரி… அப்படியே செய்கிறேன்…" என்ற ஈராஸின் கைகள், கால்கள் மட்டுமின்றி உடலே நடுங்க ஆரம்பித்துவிட்டது. அழாத குறையாக ஆண்டனியின் முன் பரிதாபமாக நின்றிருந்தான். அவனது கையில் ஒரு கத்தியை அவசரமாக திணித்த ஆண்டனி, தனது கர்ஜனையான குரலால் மீண்டும் அவனை மிரட்டினான்.

"ஈராஸ்… இப்போது நீ செய்யும் செயலால் வரலாற்றில் இடம்பெறப் போகிறாய். என்னைப் பற்றி யாரெல்லாம் பேசப் போகிறார்களோ, அங்கே நீயும் பேசப்படப் போகிறாய்…"

"தங்கள் அடிமையான நான் அதற்கெல்லாம் தகுதியானவனா?"

"ஆமாம்… என்னைக் கொல்லப்போகும் தகுதியை உனக்கு நான் தரப்போகிறேன் அல்லவா?"

"என்னது கொலையா? அதுவும் நானா உங்களை…" மேற்கொண்டு பேச முடியாமல் தவித்தான் ஈராஸ்.

"ஆமாம் ஈராஸ்! இப்போது நீ என்னை என் சுயவிருப்பத்துடனேயே கொல்லப் போகிறாய். அதனால்தான் உன் கையில் கத்தியைக் கொடுத்து இருக்கிறேன். கிளியோபாட்ரா சென்ற இடத்திற்கே நானும் செல்லத் தயாராகிவிட்டேன். தாமதம் வேண்டாம். உடனே செயல்படு..".

"இல்லை அரசே! நீங்கள் என்னைக் கொன்றாலும் பரவாயில்லை. உங்களை என்னால் கொல்ல முடியாது".

"தேவையில்லாமல் பேசிப் பேசி என் மனதை மாற்றி விடாதே ஈராஸ். சொன்னதை மட்டும் செய்! இது என் உத்தரவு! இப்போது கத்தியால் என்னை குத்தப் போகிறாயா இல்லையா?"

"இந்தக் கத்தி உயிரை பலி வாங்க வேண்டும் என்று முடிவாகிவிட்டது. அதற்குக் காரணமாக நான் அமைந்துவிட்டேன். உங்கள் முகத்தை மட்டும் திருப்பிக் கொள்ளுங்கள். கண்களை மூடிக்கொள்ளுங்கள். இந்தக் கத்தியால் உயிரை எடுக்கிறேன்…" என்று ஈராஸ் சொல்ல, அடுத்த நொடியே ஆண்டனி நெஞ்சை நிமிர்த்தி தன் முகத்தை வேகமாக திருப்பிக் கொண்டான். கண்களை மூடிக்கொண்டான்.

நொடிகளின் வேகம் அதிகரித்தது. ஆனால், ஆண்டனிக்கு எதுவும் ஆகவில்லை. ஒரே ஒரு சத்தம். யாரோ, "ஆ…!" என்று கத்திக்கொண்டு விழுவதைக் கேட்ட ஆண்டனி சட்டென்று கண்களைத் திறந்தான். அவனுக்கு எதிரே, ஈராஸ் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.

திடுக்கிட்ட ஆண்டனி ஈராஸைப் பிடித்து உலுக்கினான். ஈராஸின் கண்கள் இறுதியாய் ஒருமுறை இமைத்துப் பின் உறைந்தன. அந்தக் கத்தியை அவனது உடலில் இருந்து பிடுங்கிய ஆண்டனி, மண் தரையில் அந்த கத்தியை செங்குத்தாக நிறுத்தினான். அதன்மீது கண் இமைக்கும் நேரத்தில் பாய்ந்தான்.

சற்றுநேரத்தில் அங்கு வந்த எகிப்து வீரர்கள் சிலர் ஆண்டனி கத்திக்குத்து காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதையும், அவனுக்கு அருகில் ஈராஸ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதையும் பார்த்து திடுக்கிட்டனர்.

"கிளியோபாட்ரா தங்களைப் பார்க்க ஆசைப்படுகிறார். அதற்குள் இப்படி அவசரப்பட்டு விட்டீர்களே…" என்று அவர்கள் சொன்னபோது, போக இருந்த உயிரையும் பிடித்துக் கொண்டு அதிர்ச்சியானான் ஆண்டனி.

அப்போது அவனால் ஒன்றை மட்டுமே உடனடியாக சொல்ல முடிந்தது. "என்னது…!! கிளியோபாட்ரா இன்னும் சாகவில்லையா?"

(இன்னும் வருவாள்…)

About The Author