உறவுதான் ராகம் (1)

ஏழரை மணிக்குத் துயிலெழுந்து, இன்றைக்குச் செய்ய வேண்டிய காரியங்களுக்கு மனசுக்குள்ளே பட்டியல் போட்டுக் கொண்டிருந்த போது பெட்காபியோடு அறைக்குள் நுழைந்தாள். பட்டியலின் முதல் ஐட்டத்தை அவளிடம் சொன்னேன்.

“இந்தாம்மா, சீக்கிரம் டிபன் ரெடி பண்ணிட்டு நீயும் ரெடியாகு. குட்டிப்பயல எழுப்பிவிடு.”

“என்ன சமாசாரம், மாணிங் ஷோவுக்குப் போறீங்களா? எனக்கு வீட்ல வேலயிருக்கு. நா வரல. ஒங்க மகனக் கூட்டிக்கிட்டு நீங்க போய்ட்டு வாங்க.”

“மாணிங் ஷோவுமில்ல மண்ணாங்கட்டியுமில்ல. எங்க போறோம்னு நா சொன்னா சந்தோஷத்ல நீ திக்குமுக்காடிப் போவ.”

“சொல்லுங்களேன் திக்கு முக்காடறேன்னு பாப்போம்.”

சொன்னேன்.

“ஹை!” என்கிற ஒரே எழுத்தில் தன்னுடைய புளகாங்கிதத்தை வெளிப்படுத்தினாள். பிறகு விறுவிறுவென்று வேலைகள் நடந்தன. டிபன் ரெடி பண்ணி, தான் ரெடியாகி, பையனை எழுப்பிக் குளிக்க வைத்து, முந்திரிப் பருப்பு போட்ட ஸ்பெஷல் உப்புமா வையும் முட்டைப் பொரியலையும் லஞ்ச் பாக்ஸில் பேக் பண்ணிக் கொண்டு முக்கால் மணி நேரத்தில் ரெடியாகி விட்டாள்.

பிறகு, காரில் போகிற போது தான் என்னிடம் பேச அவளுக்கு நேரங் கிடைத்தது. “ராத்திரி கனவு கினவு ஏதுங் கண்டீங்களா?”

“பகல் கனவுதான் நாங் காணறது. எதுக்குக் கேக்கற?

“அத்தயப் பாக்கப் போவோம் போவோம்னு பல தடவ நா சொல்லியும் நீங்க கேக்கல. பாட்டியப் பாக்கணும்னு இவன் எத்தனையோ தடவ அழுதும் நீங்க மனசிறங்கல இன்னிக்கி திடீர்னு காலைல எந்திரிச்சவுடன அம்மாவப் பாக்கப் போறோம்னு ஒரு குண்டத் தூக்கிப் போட்டீங்களே…”

“திடீர் எல்லாம் ஒண்ணுமில்லை, நேத்தே முடிவு பண்ணி வச்சிர்ந்தேன். ஒனக்கும் இவனுக்கும் ஒரு ஸர்ப்ரைஸ் குடுப்போம்னுதான் நேத்து சொல்லல.”

“ஒம்போது மாசங்கழிச்சி இப்பத்தான் ஞானோதயம் வந்துச்சாக்கும்?”

“ஒம்போது மாசங்கழிச்சி இன்னிக்குத் தானே மதர்ஸ் டே வந்திருக்கு! அதோட, இன்னிக்கி ஸண்டே வேறயா, போனாப் போகுது அம்மாவப் போய்ப் பாத்துருவோம்னு நேத்து முடிவு பண்ணினேன். வெறுங்கையோட போனா நீ திட்டுவன்னு மெனக்கெட்டு நேத்து ஆபிஸ்லருந்து வர்ற வழியில டி நகர் போய் அம்மாவுக்கு ஒரு பொடவ….”

“பிரேக் பிரேக் பிரேக். பிரேக் போடுங்க. ஸடன் பிரேக்.” என்னுடைய வாக்கியத்தை நான் முடிக்கு முன்னால், காரை ஓரங்கட்டி பிரேக் போட வைத்தாள்.

பிறகு, நான் எதிர்பார்த்த மாதிரியே, “எங்க, அந்தப் பொடவையக் காட்டுங்க” என்றாள். பிறகு, நான் எதிர்பார்த்த மாதிரியே, “ஐயே, நல்லாவேயில்ல, பொடவை செலக்ட் பண்ண ஒங்களுக்கு என்னங்க தெரியும், என்னக் கூட்டிட்டுப் போயிருக்கலாந்தானே” என்று வருத்தப்பட்டாள்.

பிறகு, நான் எதிர்பார்க்காத மாதிரி, “வண்டியட் டி நகர்க்குத் திருப்புங்க” என்று ஆணையிட்டாள். “அந்தக் கடக்கிப் போங்க. பொடவயச் சேய்ஞ்ஜ் பண்ணிரு வோம். ஒரு நூறு எரநூறு கூட இருந்தாலும் பரவாயில்ல, பொடவ பாக்க லட்சணமாயிருக்க வேண்டாமா?”

“இன்னிக்கி ஸண்டே, டி நகரெல்லாம் லீவு.”

“பொய் சொல்லாதீங்க.”

“ஓன்ட்ட ஏன் பொய் சொல்லப் போறேன் டார்லிங், நெஜம்மாவே இன்னிக்கி ஸண்டேதான்.”

“அது எனக்குத் தெரியாதாக்கும்? ஜோக்கா அடிக்கிறீங்க. ஸண்டேயும் இப்ப கடைங்க தொறந்திருக்கு.”

“இல்லம்மா, நா பொடவை வாங்கின கடயில கேட்டேனே. ஸண்டே லீவுன்னு சொன்னாங்க.”

ஒருமாதிரி இவளை சரிக்கட்டிக் காரைக் கிளப்பினேன்.

அம்மாவுக்குப் புடவையெடுக்க இவளைக் கூட்டிக் கொண்டு போக எனக்கென்ன பைத்தியமா! இது நல்லாயில்ல, அது சரியில்லயென்று கழிப்பாள். கொஞ்சம் காஸ்ட்லியா யெடுப்போமே என்பாள். ஒரு புடவை போறாது என்பாள். அத்தைக்கு அது வாங்குவோம் இது வாங்குவோம் என்று அனத்துவாள். ரெண்டு மணி நேரத்தை விரயமாக்கிவிட்டு ஒரு ரெண்டாயிரம் ரூபாய்க்கு வெட்டிச் செலவு வைத்திருப்பாள். தப்பித்தேன்!

மாமியார் மேலே அநியாயத்துக்குப் பிரியம் இவளுக்கு. மேலோட்டமாய்ப் பார்த்தால் அது ஞாயம்தான்.ஒன்பது வருஷங்களுக்கு முன்னால், பிறந்த வீட்டைப் பகைத்துக் கொண்டு கட்டின புடவையோடு என்னை நம்பி ஓடி வந்தவளுக்கு அடைக்கலந் தந்து, மருமகளென்று இன்ஸ்ட்டன்ட் அங்கீகாரம் வழங்கி, உச்சி மோந்து, உடைகள் தந்து, அப்பாவை வழிக்குக் கொண்டு வந்து, அன்பை அள்ளிக் கொட்டிய அத்தையில்லையா!

அதனால்தான், அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட நான் முடிவெடுத்திருப்பதைச் சொன்னவுடன் ஆடிப் போய்விட்டாள். அடம் பிடித்தாள். என்னை அறம் பாடினாள். அத்தையைக் கட்டிக் கொண்டு அழுதாள். அத்தை போன பின்னால் மகனைக் கட்டிக்கொண்டு அழுதாள்.

ஒரு வாரம் ஸ்ட்ரைக், சமையலறையில் பந்த்.

சரவணபவன் வசந்தபவன், அஞ்சப்பர் அரசப்பர், காரைக்கடி பரமக்குடி என்று வகை வகையான மெனுவை வாய்க்கு ருசியாய்ச் சாப்பிட எனக்கொரு அரிய சந்தர்ப்பம் கிட்டியது! அப்பா ஒரு பொன்முட்டை போட்டுக்கொண்டிருந்த வாத்து. பத்தாயிரம் பென்ஷன் வந்து கொண்டிருந்தது.போன வருஷம் அப்பா செத்துப் போன பின்னால், பென்ஷன் கட்.

அப்பா போன பின்னால் அம்மாவுக்குப் பாதி பென்ஷன் வருமென்றார்கள். ஏற்பாடு செய்தேன்.அம்மா ஒரு நிரந்தர நோயாளி. மருந்துக்கும் மருத்துவர்களுக்கும் சராசரியாய் மாசம் நாலாயிரம் ரூபாய். அப்பாவின் பென்ஷன் வந்து கொண்டிருந்த வரை அம்மாவின் மருத்துவச் சுமை பெரிசாய்த் தெரியவில்லை. அப்பா போன பின்னால், அம்மாவைத் தூக்கிச் சுமப்பது ஒரு கேள்விக்குறியாகிப் போனது.

மருத்துவச் செலவுகள் ஒருபுறம் இருக்க, இந்த விஸ்வாசமுள்ள மருமகள், மாமியாரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது அபத்தமாயும் இயற்கைக்கு முரணாயும் இருந்தது. மாமியாருக்கு டெய்லி ஸூப் என்ன, பழவகைகள் என்ன, பூஸ்ட் போண்வீட்டா என்ன, காளான் காப்ஸ்யூல்ஸ் என்ன, ஒரே அராஜகம்தான்.

ஐயா, இது நமக்குத் தாங்காது என்று உணரத் தலைப்பட்டேன். அண்ணாநகரில் வாங்கிய ஃப்ளாட்டுக்கு ஹவுஸிங் லோன் கட்டவே முழி பிதுங்கிக் கொண்டிருக்கும்போது அம்மாவுக்கான ஆடம்பரச் செலவுகள் அநாவசியம் என்கிற பேருண்மை புரிந்தது.

முதியோர் இல்லத்தில் குடிவைக்க முடிவெடுத்திருப்பதை இலைமறைவு காய்மறைவாய் அம்மாவின் காதில் போட்ட போது, அதிலுள்ள யதார்த்தத்தை அம்மா புரிந்து கொண்டு, என் முடிவுக்கு அமோகமாய் ஆதரவு தெரிவித்தார்கள். இதோ இவளுடைய மரமண்டைக்குத்தான் யதார்த்தம் புரியவில்லை.

(மீதி அடுத்த இதழில்)

About The Author