எனது விழியில் உனது பார்வை (1)

"பத்ரி"

மூன்றாவது முறையாக அழைப்பு வந்துவிட்டது. ஜன்னலின் அருகில் மழைச்சாரல் படும்படி அமர்ந்திருந்தான்.

"பத்ரி"

காற்றின் மணம் மிக அருகில் வீசியது.

"பத்ரி"

காற்றின் சாரல் உட்புறம் அடித்தது.

"எ… ன்னது… எழுந்திரேன்" அம்மாவுக்கு மென்மையான குரல்.

சில நேரங்களில் அலுப்பு தட்டும் போதும் கூட பிசகாத குரல்.

”இந்தா… காபி ஆறியாச்சு"

கப்பை கையருகில் பிடித்துக் கொடுத்தாள். "குடி"

குரலில் தெரிந்த மிரட்டலோ அல்லது எல்லை மீறிய அலுப்போ. வாங்கிக் குடித்துவிட்டு காபி கப்பை நீட்டினான்.

"எழுந்து வா… உடம்புக்கு ஆகாது"

"மன்னி வரலியா.

"வருவா, நீ எழுந்திரு…"

"மன்னி வரட்டும். அதுவரைக்கும் நான் இங்கேதான் இருப்பேன்." இருபத்தாறு வயது மழலை கேட்டது. அம்மா நகர்ந்து போனது புரிந்தது.

பத்ரி ஜன்னலோடு முகத்தைத் தேய்த்துக் கொண்டான். மூடியிருந்த கண்களின் மேல் நீர்த் திவலைகள். மனசு புழுங்கி உடலெங்கும் ஜில்லிப்பு. என் இன்னும் வத்சலா மன்னியைக் காணோம்?

நிச்சயம் நேரம் ஓடியிருக்க வேண்டும். யாருக்கு புருகிறது வினாடி, நிமிஷம் எல்லாம். நேத்து காலைல… முந்தா நாள் ராத்திரி… ஜோன்னு மலை கொட்டினப்போ, என்னமா அலங்காரம்… பூ வச்சு ஜோடிச்சு… ஹப்பா… இத்தனை உசரமா…

ஊஹும் எதுவும் புரியாது. புலப்படாது. தொடு. தைரியமா தொடு! கையைப் பற்றி அழுத்தி ஸ்பரிச சந்தோஷம் மட்டும். தகவல் ஒரு புலனில் கிரகிக்கப்படும். இன்னொரு தடவை தொட ஏதோ புலனாகும்.

"இதுவோ… இதுவே…"

*****

”இவதான்.. உன்னோட மன்னி.”

”மன்னி, உங்க பேரு”

”பாரேன், உடனே விசாரணை!”

”இருக்கட்டுமே. தெரிஞ்சுண்டா என்ன தப்பு”

”வத்சலா” இரைச்சல்களின் நடுவே தம்புராத் தந்தி.

”மன்னி.. உன்னைத் தொடலாமா…”

”எ. என்ன?”

ச்சீ.. வாயை மூடூரா..”

”ஏன் பதட்டப்படறீங்க. பேசாம இருங்களேன்.”

”சனியன். புத்தி ௬டவா இல்லாம போச்சு… பகவானே… என்னை என் சோதிக்கறே…”
* * *
ஆனால் வத்சலா தனிமையில் அவனிடம் வந்தாள். தொடச் சொன்னாள். தயங்கியவனின் கை பற்றிக் கொண்டாள்.

”நான்தான் உன்னோட மன்னி. பேரு வத்சலா. படிப்பு பி.ஏ. ஒத்தைப் பின்னல், கொஞ்ச ஓவல் ஷேப்ல முகம், ஒல்லிதான். கவிதை பிடிக்கும். எழுதுவேன் எப்போவாவது. ரசம் வைச்சா ”சூப்பர்” னு டம்ளரோட குடிக்க கியூ நிக்கும். ஜஸ்கிரீம் பிடிக்கும். மழைச்சாரல் பிடிக்கும். ஏலக்காய் டீ பிடிக்கும். ஜேசுதாஸ் பிடிக்கும். இப்போ பத்ரியையும் பிடிக்கும்.” மூச்சு விடாமல் பேசினாள்.

”மன்னீ”

"ஸோ… வீ ஆர் ஃ ப்ரெண்ட்ஸ்… ஒக்கே”

பார்வை எப்படி மங்கலாகி மறைந்து போனது என்று ஒரு வார்த்தை விசாரிக்காமல் நகர்ந்தாள்.

*****

யார் சொன்னது, அறிமுகத்திற்கும் பழக்கத்திற்கும், பேச்சும் பார்வையும் அவசியம் என்று. வத்சலாவுடன் நிறையப் பேச முடியவில்லைதான். அவளைப் பார்க்கவே முடியவில்லைதான்.

”ம.ன்..னி”

எதிரில் வந்து நிற்பது புடவை சரசரப்பில் புரியும். கேட்டது கொண்டு வந்து தரப்படும். ”என்ன செய்யட்டும்?” என்றதில் அக்கறையும் அன்பும் புரியும்.

அண்ணாவிடம் மன்னி சொன்னாளாம்.

”அப்படியே பத்ரி உங்கப்பா மாதிரியே பரந்த மார்பு. வட்ட முகம். நீங்க கொஞ்சம் பூஞ்சை. பத்ரி நடை கூட உங்கப்பா சாயல். இரூட்டுல நின்னா இவரா… அவரான்னு தெரியாது.”

அண்ணா முகம் என்னவாய் மாறியதோ, ஆனால் மன்னி மறுமுறை வேறெதுவும் ஒப்பிட்டு பேசவில்லை. இந்த ஒரு வருஷம் காலமாய்.

*****

ஹால் கடிகாரம் ”டோய்ங்” என்றது. ஏதோ அரை மணி.  ஐந்தரையா… ஆறரையா… தெரிந்து என்ன ஆகப்போகிறது.

”வா. பத்தாச்சு படு. விளக்கை அணைச்சுட்டு நாங்களும் படுக்கணும்”

படுத்ததும் நினைப்புகள். அது அலுத்ததும் கனவுகள். அப்புறம் மயக்கம். மீண்டும் விழிப்பு. எழுந்ததும் சுடச் சுட காப்பி.

மன்னியின் வளைகாப்பின்போது ஹால் மூலையில் முகமெல்லாம் பரவசமாய் உட்காந்திருந்தான். நடப்பதை எல்லாம் பக்கத்தில் அமர்ந்த ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

”கை நிறைய வளையலா!” என்றான் பூரிப்பாய்.

”ம். அதனாலதான் வளைகாப்புன்னு பேரு”

மன்னி வளையல்களைத் தொடச் சொன்னாள். கண்ணாடி வளையல்கள் சப்தித்தது பிடித்தது. அதைவிட அதிகமாய் மன்னியை.

”என்ன… கவிதை எழுதியிருக்கீங்க..”

சில சமயம் மரியாதை. சில சமயம் ”நீ… வா… போ…” புரிபடாத உறவுத் குழப்பம்.

”அது எதோ… கிறுக்கல்… பத்ரி…”

சொல்லேன். நானும் கேட்கறேன்.”

மன்னியிடமிருந்து சில வினாடிகள் பதிலில்லை.

எழுந்து போய்விட்டாளா.
.
”மன்னீ”

”ம்”

”சொல்லுங்கோ”

வேணாம்… பத்ரி”

”ஏன்… ஞாபகம் இல்லியா”

இருக்கு. ஆனா…”

சொல்லு என்றான் பிடிவாதமாய்.

கயல் விழி…
ராஜபார்வை…
மயில் தொகை
முழுவதும் கண்களாம்…
வேலும் விழியும் ஒன்றென
இலக்கியம் சொன்னது…
என் பார்வை மட்டும்
பழுதடைந்து…

பத்ரியிடம் மெளனம். வத்சலா பதறியிருக்க வேண்டும்.

(மீதி அடுத்த இதழில்)

About The Author