கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

நெற்றிக்கண் திறப்பினும்..

இலக்கியப் படைப்புகளில் தவிர்க்க வேண்டிய குற்றங்களை நன்னூல் இலக்கண நூல் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறது. அவை:

குன்றக் கூறல்: சொல்ல வந்த பொருளை முழுமையாகச் சொல்லாமல் அரை குறையாக சொல்வது. சொல்ல வந்த பொருள் முழுமையாக உணர்த்தப்படாமல் இருந்தால் அது குன்றக் கூறல்.

மிகைபடக் கூறல்: படிப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும் வகையில் விஷயங்களை தேவையின்றி மிகைபடுத்திக் கூறுவது.

கூறியது கூறல்: ஒரு முறை சொன்ன விஷயங்களையே திரும்பத் திரும்ப சொல்லுவது, அதை முன்பே சொல்லிவிட்டோமே என்ற உணர்விலாமல்.

மாறுகொளக் கூறல்: முதலில் சொன்ன விஷயங்களுக்குப் பின்னர் சொல்லப்படும் கருத்துக்களில் முரண்படுதல்.

வழூஉச் சொற்புணர்தல்: நூலில் சொல்லப்படும் கருத்துகளுக்கு பொருத்தமான சொற்களையும், வாக்கியங்களையும் பயன்படுத்த வேண்டும். தகாத வார்த்தைகளையும், தரக் குறைவான பதங்களையும் பயன்படுத்தக் கூடாது.

மயங்க வைத்தல்: எழுதுகையில் தெளிவின்றி என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாதபடி எழுதுவது. இது ஒரு குழப்பம் தரும் குற்றம்.

வெற்றெனத் தொடுத்தல்: அர்த்தமில்லாத சொற்களைப் போட்டு எழுதுவது. வெற்றுரைகளே மிகுதியாகக் காணப்படும் குற்றம்.

மற்றொன்று விரித்தல்: சொல்ல வந்த விஷயங்களை விடுத்து சம்பந்தமில்லாத வேறு விஷயங்களை விளக்கமாக சொல்லுவது.

சென்று தேய்ந்திறுதல்: விறுவிறுப்பாகத் துவங்கி பின் சுவை குறைந்து, வேகம் தடையுற்று, ஒரே சீராக இல்லாமல் எழுதுவது.

நின்று பயனின்மை: அர்த்தமற்ற அடுக்கு சொற்களுடன் வெறும் வார்த்தைக் குவியலாக படைப்பது.

அதே போல மொழிக்கு அழகு சேர்க்கும் உத்திகளும் பத்து வகையாக சொல்லப்பட்டிருக்கின்றன.

சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், நவின்றோர்க்கினிமை, நன்மொழி புணர் தல், ஓசையுடைமை, ஆழமுடைத்தாதல், முறையின் வைப்பு, உலகமலையாமை, விழுமியது பயத்தல் மற்றும் விளங்கு உதாரணத் தாக்குதல் ஆகியவை மொழியின் அழகுக்கு அழகு சேர்ப்பவை.

(ஆதாரம் : பி.சி.கணேசன் அவர்களின் தமிழ்க் கருவூலம் – நன்றி)

About The Author

1 Comment

  1. ben aloysius

    Out of all what I read here this entry is short, sweet, and informative.
    Hope to read more of this writer. Do not trust photos and personal information published in Internet.
    Thank you.

Comments are closed.