கிங்.. க்வீன்.. ஜாக் (4)

"எங்கப்பா நல்லவர்தான் தினகர். ஆனா சீட்டாடணுங்கிற வெறியில அந்த நிமிஷம் என்ன செய்யிறார்ங்கிற நிதானம் இல்லை"

தினகரைப் பொறுத்தவரை ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு ரகம்.

"சொல்லிப் பார். பதற்றப்படாமல். கேட்கவில்லையா.. விட்டு விடு"

"எப்படி முடியும் தினகர். எப்பவும் இறுக்கம் அப்பிக் கிடக்கிற குகைக்குள் காலடி வைக்கிற மாதிரி, வீட்டுக்குள் போனதும் வாடிப் போகுது மனசு"

"மனசுக்கு எல்லாத்தையும் கொண்டு போகாதே. அப்பாவைத் திருத்த முடியலைன்னு நீயும் உங்கம்மாவும் ஒவ்வொரு நிமிஷத்தையும் ஏன் வீணாக்கணும். அது உங்க லைஃப்.. நீங்க வாழ வேண்டிய நிமிஷங்கள்"

புத்திக்குப் புரிந்தது. மனசு ஏற்க மறுத்து அடம் பிடித்தது.

"மேல.. மேல.. நீங்களாவே ஒரு வலை பின்னி முடங்கிப் போறீங்க. உங்க அப்பாவும் அதே போல இன்னொரு வலையில"

தினகர் நிதானமாய் துளிக்கூட சலிப்பு காட்டாமல் தினசரி சொல்லிச் சொல்லி, அவளைச் சுற்றி நெருக்கமாய்ப் பின்னப்பட்டிருந்த மானசீக வலையை அறுத்து விட்டான்.

அவனுடன் இருக்க நேர்கிற நேரங்களில் தன்னம்பிக்கை துளிர் விட்டுக் கொள்ளும். வீட்டுக்குத் திரும்பியதும் அப்பா இல்லாத வெறுமையும், அம்மாவின் சோக வலையும் அவளையும் முடக்கிப் போடும்.

"யாரு.. தினகர்.. சொல்லு"

அம்மா கேட்டதும் என்னவென்று சொல்ல?

"உனக்கு எப்படித் தெரியும்மா?"

"பக்கத்து வீட்டுக்கு ஃபோன் பண்ணான்.. நீ அப்போ இல்லை. ஒரு வாரம் லீவுன்னு சொன்னான்"

"ஓ!"

"யாருடி அவன்"

"இருட்டிலேயே பிடிவாதமா நிக்கறேன்னு நின்னப்ப.. வெளிச்சத்தைக் காட்டினவன்மா"

"புதிர் போடாதே"

தினகர் கொடுத்த தைரியம் பற்றிச் சொன்னாள்.

"இப்பல்லாம் என்னால எதையாவது ரசிக்க முடியறதுன்னா.. அது தினகராலதாம்மா"

"எந்த ஜாதி"

"எதுக்கும்மா"

"சொல்லேன். பதில் கேள்வி கேட்காம உன்னால பேச முடியாதா?"

உமாவுக்கு முதலில் சிரிப்புத்தான் வந்தது. பாவம், அம்மாவால் சில எல்லைகளைத் தாண்டி வர முடியவில்லை.

"மனுஷ ஜாதிம்மா. நட்புக்கு அந்த விவரம் போதும்"

அம்மா ஏனோ மெளனமாகி விட்டாள்.

ஒரு கவலையை அலசித் தீர்வு தேடிய மெளனமும் உண்டு. தீர்வு புலப்படாமல் விரக்தியில் வாய் மூடிப் போகும் மெளனமும் உண்டு. உமாவும் மேலே பேசவில்லை. அம்மாவைச் சமாதானப்படுத்தவென்று ஏதேதோ பேசிக் கொண்டு போக, அம்மாவின் பயம்தான் அதிகரிக்கும்.

தினகர் ஆனால் இதற்கு முரணாகப் பதில் சொன்னான்.

"உன் அம்மாவைப் பொறுத்தவரை அந்தக் கேள்விகளில் நியாயம் இருக்கு"

"நியாயம் இருக்கோ இல்லியோ, பயம் இருக்கு அம்மா மனசுல"

"அப்ப நீ வெளிப்படையா இல்லேன்னு அர்த்தம். உன்னைப் பார்த்து உங்கம்மா எதுக்குப் பயப்படணும்"

உமா நிதானமாய்ச் சொன்னாள்.

"இது என்னால வர்றதில்லை. எங்கப்பாவால வந்தது. எதிர்பார்ப்பு.. ஏமாற்றம் எல்லாத்துக்கும் அம்மா அவர்கிட்டேதான் கத்துக்கிட்டா"

சிரிப்போடுதான் சொன்னாள். சொல்லி முடிக்கும்போது மனசு கசந்து வழிந்தது.

தினகர் பேசாமல் இருந்தான். அவள் தரப்பு வாதத்தின் நியாயம் முழுமையாய்ப் புரிகிறவரை.

மறுபடி மென்மையாய்ச் சொன்னான்.

"பேசு. உமா. அம்மா மனசுல கவலையை விருட்சமாக விட்டுராதே. தினகர் விஷயமோ.. வேறெந்த விஷயமோ.. அம்மா ஏத்துக்கணும்னு போராடாம.. உன் மனசுல இவ்வளவுதான்னு புரிய வைக்கிற மாதிரி. அதுல ஒண்ணும் தப்பு இல்லை.. நாம மனுஷங்கதான். பேச்சு சக்தி கடவுள் கொடுத்ததே அவசியத்துக்கு பேசித்தான் ஆகணும்னு.. இல்லேன்னா இன்னொரு ரக மனுஷனா.. பேச்சு வராத மாதிரி படைச்சிருக்கலாமே"

அவன் பேசப் பேச.. அதன் தாக்கம் தன்னைப் பாதித்த மாதிரி.. அம்மாவுக்கும் தன்னுடைய பேச்சு அவசியம் என்று புரிந்தது உமாவுக்கு. இன்னொன்றும்.. அதே போலத்தான் அப்பாவுக்குமா?

(தொடரும்)

About The Author