புனிதப் பயணம் (1)

அம்மாவின் அன்புத் தொல்லை தாளாமல் வேகாத வெயிலில் மவுன்ட் ரோடை நோக்கிக் கிளம்பினேன்.

ஸ்பென்ஸருக்கு எதிரில் ஒரு ட்ராவல் ஏஜென்ட் பெயர்ப் பலகை கண்ணில் பட்டது. பிஸ்மில்லா சொல்லிப் படியேறினேன்.

சின்ன ஆஃபீஸ் என்றாலும் கச்சிதமாய் இருந்தது. ஜில்லென்று ஏஸி, வெயிலில் வந்த உடம்பைக் குளிர்விக்கிற மாதிரி. மனசைக் குளிர்விக்கிற மாதிரி ஒரு முகம் கண்ணில் பட்டது.

ஜான்ஸன்.

திருச்சி ஜமால் முஹம்மது காரேஜில் என்னோடு படித்தவன். இவன் மெட்ராஸுக்கு வந்ததும் தெரியாது. டிராவல் ஏஜென்ட் ஆனதும் தெரியாது. கிட்டத்தட்ட அஞ்சு வருஷத்துக்குப் பிறகு சிநேகிதனைப் பார்க்கிற சந்தோஷம் முகத்தில் பிரதிபலிக்க, மெல்ல அவனுடைய ஆசனத்துக்கருகில் போய் நின்று, அவனுடைய சிப்பந்திகளுக்குக் கேட்கக் கூடாத தாழ்வான குரலில், "டேய் ஜான்ஸா" என்றதும் நிமிர்ந்து பார்த்து முகம் மலர்ந்தான்.

"டேய் நீயா, நீயும் மெட்ராஸ்லதான் இருக்கியா? எத்தன வருஷம் ஆச்சுடா நாம மீட் பண்ணி! ஒக்காரு ஒக்காரு. என்னோட ஆஃபீஸ்னு தெரிஞ்சுதான் வந்தியா?"

"எனக்கு இப்ப ஒரு ட்ராவல் ஏஜன்ட் தேவை. போர்டப் பாத்துட்டு உள்ள நொழஞ்சேன். வந்து பாத்தா, நீ இருக்க. வாட் ய லக்."

"வெரிகுட் வெரிகுட். என்ன விஷயமா ட்ராவல் ஏஜன்ட்டத் தேடற?"

"ட்ராவல் பண்ணத்தான்."

"அபுதாபியா, அமெரிக்காவா?"

"அதெல்லாம் இல்ல ஜான்ஸா. பக்கத்துலதான். பாக்கிஸ்தான். எங்கம்மா ஒரே நச்சரிப்பு, பாக்கிஸ்தானுக்குப் போய் அங்க உள்ள தர்காக்களயெல்லாம் பாத்துட்டு ப்ரார்த்தனை பண்ணிட்டு வரணும்னு. எங்கம்மாவ நாந்தானேடா கூட்டிட்டுப் போகணும். தெரிஞ்ச ட்ராவல் ஏஜென்ட் யாரும் இல்ல. சரி எவனாவது ஒர்த்தனப் புடிப்போம்னு மவுன்ட் ரோடுக்கு வந்தா, வசம்மா நீ மாட்ன. நீ தாண்டா ஜான்ஸா டிக்கட், விஸா எல்லாம் ஏற்பாடு பண்ணனும். எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம்."

"பண்ணிட்டாப் போச்சு. நம்ம தொழில் அதானேடா. நீ முஸ்லிம்ங்கறதுனால பாக்கிஸ்தான் விஸா ஈஸியாக் கெடச்சுரும். வெவரமெல்லாம் எழுதிக் குடு."

எழுதிக் கொடுத்தேன்.

நான் எழுதித் தந்ததை வாசித்துக் கொண்டிருக்கும் போதே ஓர் ஐட்டத்தில் தலை நிமிர்ந்தான்.

"என்னடா, உர்து ஸ்பீக்கிங் முஸ்லிம்னு எழுதியிருக்க, நீ தமிழ் ஸ்பீக்கிங் ஆச்சே?"

"அப்படியே போடு ஜான்ஸா, உர்து ஸ்பீக்கிங்னா ஒரு வெய்ட் இருக்கும்ல? நாந்தான் உர்து நல்லா பேசுவேனே!"

"அதான் நல்லா பேசுவியே, இங்லீஷ் தான ஒனக்குத் தகராறு! இருந்தாலும், பொய் சொல்லக் கூடாதுல்ல பாய்."

"ஆயிரம் பொய்யச் சொல்லியாவது ஒரு கல்யாணத்தப் பண்ணனுங்கற மாதிரி, புனிதப் பயணம் போகும் போதும் பொய் சொன்னாத் தப்பில்லடா. நீ ஆக வேண்டியதப் பாரு. கொஞ்சம் சீக்கிரம்."

"இன்னிக்கு தேதி ரெண்டு. எட்டாந் தேதி பாம்பே கராச்சி ஃப்ளைட்ல ரெண்டே ரெண்டு ஸீட் இருக்கு. அத பிளாக் பண்ணிர்றேன். அத விட்டா மூணு வாரத்துக்கு ஃப்ளைட் எல்லாம் ஃபுல்."

"எப்படிடா ஃப்ளைட் இன்ஃபர்மேஷன் எல்லாம் விரல் நுனியில வச்சிருக்க?"

"எல்லாம் இன்னொரு பார்ட்டிக்காக சேகரிச்ச தகவல். அந்த அம்மா வரல. வந்திருந்தா, அதுக்கு ஒரு ஸீட் போயிருக்கும். அப்புறம் ஒங்கம்மாவ விட்டுட்டு நீ தனியாத்தான் புனிதப் பயணம் போகணும்."

"வாட் ய லக்" என்று என்னுடைய அதிர்ஷடத்தை நான் திரும்பவும் வியந்து கொண்டிருந்தபோது, "தம்பி, நா திருச்சிலயிருந்து வர்றேன்" என்று பக்கவாட்டில் ஒரு குரல் கேட்டது. குரலுக்கு சொந்தக்காரி எழுபதைக் கடந்த ஓர் எளிமையான பெண்மணி.

அந்தத் தாயை ஏறெடுத்துப் பார்த்த ஜான்ஸன், பிறகு என்னைப் பார்த்தான், உதட்டைப் பிதுக்கியபடி.

"தம்பி, நா பாக்யலச்சுமி, ஒங்க கூட ஃபோன்ல பேசினேன்…"

பாக்கியலட்சுமியைப் பொருட்படுத்தாமல் ஜான்ஸன், என்னிடம் குசுகுசுத்தான். "நா சொன்னேனே பாக்கிஸ்தான் பார்ட்டி, அது இது தான்."

பிறகு அவநம்பிக்கையோடு அந்த அம்மாவைப் பார்த்தான். "ஒக்காருங்க பெரியம்மா. நீங்க ரொம்ப லேட் பன்னிட்டீங்களே. பனிரெண்டு மணிக்கி வர்றதாச் சொன்னீங்க. இப்ப மணி ரெண்டு.’

"மன்னிச்சிக்கிருங்க தம்பி, இப்பத்தான் மொதோ தடவையா மெட்ராஸ்க்கு வாறேன். தொணக்கி யாரும் கெடையாது…."

"நீங்க பாம்பே போய் கராச்சி ப்ளேன்ல ஏறணும். தொணை இல்லாம எப்படிப் போவீங்க?’

"போயிருவேன் தம்பி. நீங்க ஏற்பாடு மட்டும் பண்ணிக் குடுத்துருங்க."

"அப்ப நீங்க திருச்சிக்கிப் போய்ட்டு சாவகாசமா வாங்க. மூணு வாரத்துக்கப்புறந்தான் ப்ளேன்ல ஸீட் இருக்கு."

"எட்டாந்தேதி இருக்குன்னு சொன்னீகளே ராசா."

"இருந்துச்சு பெரியம்மா, ரெண்டு ஸீட் இருந்துச்சு. நீங்க வராததுனால வேற பாஸஞ்சருக்குப் போட்டாச்சு."

"அப்படியெல்லாம் சொல்லாதீக ராசா" என்று அந்த அம்மா எழுந்து ஜான்ஸனின் கரங்களைப் பற்றிக் கொண்டாள்.

"முப்பத்தாறு வருஷமாக் காத்திருக்கேன்யா. இப்பத்தான் பாக்கிஸ்தான் அரசாங்கம் அனுமதி குடுத்துருக்கு. அதயும் லேட் பண்ணிராதீங்கய்யா. நா சீக்கிரமாப் போகணும்யா" என்றபோது அந்தத் தாயின் குரல் உடைந்தது.

"ஒக்காருங்க பெரியம்மா, ஒக்காருங்க" என்று ஜான்ஸன் அந்தத் தாயை உட்கார்த்தி வைத்தான்.

"முப்பத்தாறு வருஷம் காத்திருந்தவங்க இப்ப ஒடனே போணும்ங்கறீங்க! பாக்கிஸ்தான்ல யாரப் பாக்கப் போறீங்க, ஒங்களுக்கு யார் இருக்கா அங்க?"

ஜான்ஸனின் இந்தக் கேள்விக்கு பாக்யலட்சுமி அம்மாவிடமிருந்து வந்த பதில், ஜான்ஸனை மட்டுமல்லாது என்னையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

"பாக்கிஸ்தான்ல எம்புருஷன் இருக்கார் தம்பி."

ஜான்ஸனும் நானும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.

(மீதி அடுத்த இதழில்)

About The Author