பெருசு (1)

"யோவ்… இன்னுமா போவலே" காலி டீ கிளாஸ் தம்ளர்களுடன் வந்தவன் கேட்டான்.
பெரியவர் அரைத் தூக்கத்திலிருந்து விழித்தவர் போல அவனைப் பார்த்தார்.

"முதலாளி வரச் சொன்னாரா"

முருகையன் கேலியாகச் சிரித்தான். "ஆமா.."

பெரியவர் வேகமாக எழுந்தார். மெல்ல நடந்து அறைக்கதவைத் திறக்கப் போனார். முருகையன் ஓடி வந்து தடுத்தான்.

"கதையைக் கெடுத்தே போ. உன்னை உள்ளே விட்டா, நா இப்படியே வெளிய போக வேண்டியது தான்.."

பெரியவர் நகரவில்லை. "போ… போய்ச் சொல்லு..: என்றார்.

"நீ வெளியே போ.. உன்னைப் பார்க்க முடியாதுன்னு அப்பவே சொல்லிட்டாரு"

பெரியவர் அவனைச் சந்தேகமாய்ப் பார்த்தார். "நெசமாத்தான் சொல்றேன்.."என்றான் கண்களில் ஏமாற்று இருக்குமோ என்ற பார்ப்பவர் போல அவனையே பார்த்தார்.

"பெரியவரே.. உங்கிட்ட பொய் சொல்வேனா, அந்தாளுக்கு வேற வேல இல்ல.. போவச் சொல்லுன்னாரு"

பெரியவர் சற்று நேரம் மெளனமாய் நின்றார். இதே ஆபீசில் போன வருடம் அவர் வைத்ததுதான் சட்டம். காக்கி உடுப்பை மாட்டி டுட்டிக்கு வந்துவிட்டால் எதோ ராணுவ அதிகாரி போல அலட்டல். வாட்ச்மேன்தானே" என்று இளகாரமாகக் கேட்டுவிடக் கூடாது. வாபஸ் வாங்குகிற வரை விடமாட்டார்.

அதெல்லாம் அந்தக் காலம்.

கம்பெனி பொறுப்பு பெரிய முதலாளி கையில் இருந்தது. பெரியவரை வேலைக்கு வைத்ததே பெரிய முதலாளி தானே. இன்று நிர்வாகப் பொறுப்பு சின்ன முதலாளி கையில். வயசானவங்க வேண்டாம்.என்னாவோ இளரத்தந்தான் வேணுமின்று சொல்றாராம்.

வீட்டில் பொய்ச் சொன்னால் பேத்தி சிரிக்கிறாள். "நம்மூரு முனீஸ்வரங் கோவில்ல கேட்கிறாப்ல இல்லே சொல்றாங்க" போகட்டும். மகனுக்கு இப்படி ஒரு விபத்து நேர வேணாம். வலது கைக்கு பெரிய மாவுக்கட்டு. இடது காலில் லேசான பிராக்சர்.

"ஆறு மாசம்.. மூச்.. நவுரக் கூடாது. அப்புறம் நா போருப்பில்லேன்னு" டாக்டர் அய்யா சொல்லிட்டாராம். படுத்துக் கிடக்கிறான். மருமகள் வீட்டு வேலைக்குப் போகிறாள்.

"எங்கிழவி உசுரோட இருந்தா நடக்கிற கதையே வேற…" பெரியவருக்கு இத்தனை வேதனையிலும் உள்ளூர பேருமிதம்.

"இப்படியா குடும்பம் கெடக்கும்.. அவ புத்தியிலே எதுனாச்சும் யோசனை வந்துருமே"

எத்தனை நாள்தான் இந்த போராட்டத்தில் இருப்பது. வாட்ச்மேன் வேலைக்கு முயற்சித்தால் என்ன என்று தோன்றியது.நான்கு நாட்களாய் அலைந்ததில் இன்று முதலாளியைப் பார்க்காமலேயே ஏமாற்றம்.
வெறுங்கையோடவா வீட்டுக்குப் போவறது… பேத்தியிடம் பெருமை அடித்து வைத்திருந்தார்.

"என்னைய பார்த்தா போதும். என்ன பெரிய சாமி… நல்லாருக்கியான்னு நின்று விசாரிப்பாரு.."
"அப்ப வேலை கெடச்சிருமா"

பேத்தி கண்களில் எதிர்பார்ப்பும் தாத்தாவின் மீதான நம்பிக்கையும்.
"பின்னே.."

இப்போது என்ன சொல்வது. இந்த நான்கு நாட்களில் விதவிதமாய் மழுப்பியாகி விட்டது.

பேத்தி சும்மாயிராமல் அம்மாவிடம் போய்க் கேட்டுவிட்டது.

"போவியா.. உனக்கு வேற வேலை இல்லே" என்ற எரிந்து விழுந்திருக்கிறாள்.

"நெசமாத்தானே வேலை கிடைக்கும்.." என்று வந்து கேட்டதும் பெரியவருக்கு சங்கடமாகிப் போய் விட்டது.

விஸ்தாரமாய் தாம் வேலை பார்த்த அழகைப் பற்றிக் கடைகள் சொன்னதும் தப்பாகிப் போய்விட்டது.

"ஒருநா நடுராத்திரி எவனோ களவானிப்பய உள்ளே பூந்து, சத்தம் கேட்டவுடனே பாஞ்சுட்டேன் என்னாமா திமிர்றாங்கிற.. நாட வுடலியே. மடக்கிப் போட்டு அப்பறம் பெரிய முதலாளி வந்து பார்த்து..ஏயப்பா பாராட்டி பணமில்லாம் கொடுத்தாரு…"

பேத்தி ஆவென்று அவரையே பார்ப்பதில் ஒரு பெருமை.

"ஆங்… அப்புறம்…"

"சொல்றேன்.. சொல்றேன்" என்று பிகு பண்ணிக் கொள்வதில் பெரியவருக்கு ஒரு சந்தோஷம்.

என்ன பதில் சொல்வது! வேலை இல்லை என்று பேத்தியிடம் சொல்வது கிடக்கட்டும். ஒண்டியாய் அவதிப்படுகிற மருமகளுக்கு உதவ முடியாமல் போகிறதே என்கிற வருத்தம்.

தெருவில் இறங்கி நடக்கிற போதும் அதே யோசனை.

"கிழவி இருந்தா என்ன சொல்லும்.."

அடிமனசில் கெழவி ஞாபகம் அலையடித்துக் கொண்டிருந்தது. பார்க்க அப்பாவி போல இருப்பாளே தவிர புத்தியெல்லாம் பெரிய வீட்டுக்காராங்க மாதிரிதான்.

நீ நம்ம சாதியிலே தப்பி பொறந்துட்டேன்ன்னு சொன்னா மட்டும் ஏத்துக்க மாட்டா. "நம்மா சாதிக்கு என்ன குறையக் கண்டீங்கன்னு சண்டைக்கு வந்துருவா. பொய் நின்னா போதுமே. அந்த எடத்தையே கழகப் பாக்கிருவாளே. யோசனைக் கேற்ப நடை மட்டுப் பட்டது.

மெல்ல நடந்த படி கடைவீதிக்கும் வந்து விட்டார். கடை வீதியின் அமைப்பே மாறிப்போய் விட்டிருந்தது. பழைய கடைகள். கண்ணாடிப் பொருட்கள், வியாபாரப் பொருட்கள். வியாபாரிகள் கூட புது ஆட்களாய். தகப்பன் இடத்தில் மகள். தகப்பன்! மனசுக்குள் பளீரென்று ஒரு யோசனை.

"பெரிய முதலாலியைப் போய்ப் பார்த்தால் என்ன?"

கெழவி நிச்சயம் கூடவேதான் இருக்கா. இல்லாட்டி இந்த யோசனை வந்திருக்குமா. கூடவே சிலாகிப்பும்.

பெரிய முதலாளியை வீட்டுல பொய் பாத்திர வேண்டியதுதான்..

பெரியவருக்கு நடையில் வேகம் கூடியது. வீட்டு வாசலில் வரவேற்ற நபரும் புதுசு. "யாரு..?" என்றான் அதட்டலாய்.

"பெரியசாமி.."
"என்னா?"
"பெரிய முதலாளியை பார்க்கணும்.."
"பெரிய முதலாளிய…"
"போ.. ஆசுபத்திரில போய்ப் பாரு"

என்ன சொல்கிறான்.. புரியாமல் விழித்தார்.

"அட.. நெசமாத்தான் சொல்றேன்.. அய்யா உடம்பு சோகமில்லாம ஆசுபத்திரில கெடக்கிறாரு.. போ.. அங்கெ போய்ப் பாரு"

"எந்த ஆசுபத்திரி"

டவுனில் பெரிய கிளினிக் பெயரைச் சொன்னான்.

கடவுளே.. அந்த நல்ல மனுசனையா படுக்கப் போட்டே. பெரியவர் மனசுக்குள் விம்மல்கள். போய்ப் பார்த்திர வேண்டியதுதான். சாப்பிடாத நினைவு கூட இல்லை. பெரிய முதலாளியை உடனே பார்க்கிற பரபரப்பு.

(மீதி அடுத்த இதழில்)

About The Author