அப்பு (1)

வாசலில் இருமல் சத்தம் கேட்டதுமே, ”அப்பா வந்துவிட்டார்” என்றபடி கூடத்தில் கலைந்து கிடந்த பொருட்களை ஒழுங்குபடுத்தினாள் சாரதா.

"அப்புவுக்கு இன்னும் சோறு போடலையா?" ஆறுமுகத்திடமிருந்து அதட்டலான கேள்வி வெளிப்பட்டது. அவரது சுபாவமே இதுதான். எதையும் உரக்கப் பேசியே பழக்கம். கிராம நிர்வாக அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். ஊரில் நல்ல மரியாதை அவருக்கு. அதனால் ஓய்வு பெற்றபின்னும் அவரது கம்பீரம் குறையவில்லை. வாசலை எட்டும்போது சத்தமாக ஒரு கனைப்பு அல்லது ஒரு செல்ல இருமல். வீட்டுக்குள் நுழையும்போது அதட்டலாய் ஒரு கேள்வி! இன்னாரையென்று குறிப்பிட்டுக் கேட்கப்படாதது போல் தோன்றினாலும், யாருக்கான கேள்வி அது என்பதை அவர் மனைவி சிவகாமியும், மகள் சாரதாவும் சரியாகப் புரிந்துகொண்டு பதில் தருவர்.

சற்று முன் கேட்கப்பட்ட கேள்வி சிவகாமிக்கானது. ஏனெனில், அது ‘அப்பு’ என்கிற அவர்கள் வீட்டு நாயைப் பற்றியது. சாரதாவுக்கு நாய், பூனை என்றாலே பயம்! கிட்ட நெருங்க மாட்டாள். ஆனால் அவர்கள் வீட்டு நாய்களுக்கான பெயர்களைத் தேர்வு செய்வதென்னவோ அவள்தான். முன்பு ராஜா; இப்போது, அப்பு!

அடர்ந்த பழுப்பு நிறத்தில் வாய்ப்புறம் மட்டும் கறுத்து, காது மடல்களை எப்போதும் விறைத்துக் கொண்டு நிற்கும் அப்புவைப் பார்த்தாலே பலருக்கும் பயம் வரும். இப்படி வாய்ப்புறம் கறுத்துக் காணப்படும் நாய்கள் மிகுந்த முரடாக இருக்கும் என்று ஆறுமுகம் கேள்விப்பட்டிருந்தார். ஆனால் அதற்கு நேர்மாறானது, அப்பு. அனைவரிடமும் பாசத்துடன் பழகக் கூடியது. அதனால் அதைக் கட்டி வைத்து வளர்க்க விரும்பாமல் தம் இஷ்டம் போல் வளர்த்தனர், ஆறுமுகமும் சிவகாமியும்.

தேவைப்படும்போதெல்லாம் அப்பு காட்டாமணக்கு வேலியின் இடையில் மண்ணில் பள்ளம் பறித்து, அதன் வழியாக வெளியில் ஓடிவிடும். அந்தத் தெருவுக்கு மட்டுமல்ல; அந்த ஊருக்கே அதுதான் தலைவன் போல் நினைத்த இடம் சுற்றிவிட்டு, சாப்பிடும் நேரத்திற்கு சரியாக வீட்டுக்கு வந்து விடும். சில சமயங்களில் போகாத இடம் போய் மற்ற நாய்களிடம் கடிபட்டு வருவதுமுண்டு. சிவகாமிதான் மருந்து போட்டு காயத்தை ஆற்றுவாள். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அப்புவைக் கவனித்துக் கொள்ளும் முழுப் பொறுப்பும் சிவகாமியின் ஒப்புதல் பெறாமலேயே அவளுக்கானதாய் ஒதுக்கப்பட்டது.

"காலையில்தான் பழைய சோற்றில் தயிர் ஊற்றிப் போட்டேன். சாப்பிட்டுவிட்டுத்தானே போச்சு!" என்றாள் சிவகாமி அலுப்புடன்.

"பின்னே ஏன் நாலாவது வீட்டு வாசலில் நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு நிற்கிறது? ஒழுங்கா சோறு போட்டால் அது ஏன் அங்குமிங்கும் போகிறது?" என்றார். சிவகாமி பதில் எதுவும் சொல்லாமல் முணுமுணுத்தபடி உள்ளே போனாள். என்ன பதில் சொன்னாலும் அவர் அதை ஏற்றுக் கொள்ளப்போவதில்லையென்று அவளுக்குத் தெரியும்.

சாரதா, அம்மாவிடம் மெதுவாக, "ஏம்மா, ஒருவேளை அப்பு அவர்கள் வீட்டு ஜூலியைப் பார்க்கப் போனதோ என்னவோ?" என்று தன் சந்தேகத்தை எழுப்பினாள். ‘ஜூலி’ என்பது அந்த வீட்டிலிருக்கும் வெள்ளை நிற, புசுபுசுவென்ற பாமரேனியன் நாய்க்குட்டி! "அதை உன் அப்பாவிடம் போய்ச் சொல்லு!” என்றபடி சாப்பாடு எடுத்து வைக்கத் துவங்கினாள்.

ஆறுமுகம் கரிசனம் காட்டுவது இந்த அப்புவிடம் மட்டுமல்ல, முன்பிருந்த ராஜாவிடமும் இப்படிதான். சாப்பிட உட்கார்ந்ததும், முதல் கேள்வியே "நாய்க்கு சோறு போட்டாச்சா?" என்பதுதான். சிவகாமிக்கு எரிச்சல் வந்தாலும் சாப்பாட்டு நேரத்தில் அதைக் காண்பிக்க விரும்பாமல், "யார் வீட்டிலும் இல்லாத புதுமையாயில்ல இருக்கு? எல்லாரும் சாப்பிட்டுவிட்டு மிச்ச மீதியைத்தான் நாய்க்கு வைப்பாங்க! இங்க என்னவோ விருந்தாளியைக் கவனிக்கிற மாதிரிதான் கவனிக்கிறீங்க! நான் அதுக்கு அப்புறமா சாப்பாடு வைக்கிறேன், நீங்க முதலில் சாப்பிடுங்க!" என்பாள். அவருக்கு அது சரியாகப்படாது. சரேலென்று எழுந்துவிடுவார். "முதலில் அதுக்குப் போடு! அது கொல்லை வாசலில் நின்றுகொண்டு பசியோடு என்னையே பார்த்துக் கொண்டிருந்தால் என்னால் எப்படி சாப்பிடமுடியும்? " என்பார்.

தெருவிலிருந்து கொல்லை வரை ஒரே ஓட்டமாக உள்ள கிராமத்து வீடு அது. அவர் திண்ணையில் இருந்தால் அப்பு துள்ளிக் குதித்து வாசலுக்கு வந்துவிடும். அவர் கூடத்தில் அமர்ந்தால் கொல்லைப்புறம் வந்து நிலைப்படியில் தலையை வைத்து, வீட்டுக்குள் பார்த்தபடி படுத்திருக்கும்.

கிணற்றடியில் வைத்துக் கழுவுவதற்காக பத்துப் பாத்திரங்களை அள்ளிக் கூடையில் போட்டு எடுத்து வந்த சாரதா, ஒருநாள் அப்பு அங்கிருப்பது தெரியாமல் அதன் மேல் கால் வைக்கப் போய், கடைசி நொடியில் சுதாரித்தவளாய் நிலைதடுமாறி பாத்திரங்களுடன் விழுந்தாள். நல்லவேளை! அடி பலமாகப் படவில்லை! சிவகாமியின் கூச்சலையும், பாத்திரங்களின் ‘கடமுடா’ சத்தத்தையும் கேட்டு அப்புதான் பயந்து போனது. அன்றிலிருந்து பாத்திரக் கூடையுடன் கொல்லை நிலை வாசலைத் தாண்டும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சிவகாமியும், சாரதாவும் ‘ஷ்ஷூ…..ஷ்ஷூ…..’ என்று குரல் கொடுத்துக் கொண்டுதான் காலை எடுத்து வைப்பர். அப்பு அங்கிருந்தால் அவசரமாக ஓடிவிடும். அதுமட்டுமல்ல; வெறுமனே பாத்திரக் கூடையைக் காட்டினாலே கூட ஓட ஆரம்பித்துவிட்டது.

அப்பு வீட்டுக்கு வந்ததே தனிக் கதை! அது குட்டியாயிருந்தபோது, ஏதோ வண்டியில் அடிபட்டு ரோட்டில் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்திருக்கிறது.அதைப் பார்த்ததும் மனசு தாளாமல் ஆறுமுகம் வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டார். அதற்கு சிவகாமிதான் மருந்து வைத்துக் கட்டி வைத்தியம் செய்தாள்; பாட்டிலில் பாலூட்டினாள்; அதன் கழிவுகளை அள்ளிக் கொட்டினாள். ஆறுமுகம் மேற்பார்வை இடுவதுடன் சரி. ஆனால் நகரமுடியாமல் படுத்திருக்கும் நிலையிலும், அவரைக் கண்டால் தன் குட்டி வாலை ‘விசுக் விசுக்’ என்று ஆட்டித் தன் நன்றியைத் தெரிவிக்கும். அப்போதெல்லாம் சிவகாமிக்கு மிகுந்த வருத்தம் உண்டாகும். "இத்தனை செய்கிறேனே! என்னைக்காவது என்னைப் பார்த்து இப்படி சந்தோஷப்படுகிறதா? எதற்கும் ஒரு ராசி வேண்டும்!" என்று ஆதங்கப்படுவாள்.

சிவகாமியின் பராமரிப்பால் அப்புவுக்கு மறுவாழ்வு கிடைத்தது. இருந்தாலும், முன்னங்கால் ஒன்றை லேசாக நொண்டியபடிதான் நடக்கும். இந்த மட்டில் பிழைத்ததே பெரிது என்று ஆறுமுகம் அகமகிழ்வார். அவர் அப்புவை என்றுமே கொஞ்சியதில்லை. "என்ன, என்ன வேண்டும் உனக்கு?……… சாப்பிட்டியா?……….ஊர் சுற்றப்போனே!…..அதுக்குள்ள வந்துட்டே!….." என்று எல்லாம் அதட்டல் தான்! அந்த அதட்டல்களுக்குள் பொதிந்திருக்கும் அக்கறையை அப்பு உணரத் தவறவில்லை. பதிலுக்கு அவர் முன் நின்றுகொண்டு வாலை ஆட்டிக் கொண்டே இருக்கும். சிவகாமி அதனிடம், "போதும்… போதும்… வால் சுளுக்கிக் கொள்ளப் போகிறது!" என்று செல்லமாகக் கடிந்து கொள்வாள்.

ஒருநாள் அப்புவைக் காணவில்லை. அன்று வீட்டில் கறிக்குழம்பு வேறு! கறிக்குழம்பு என்றால் சாப்பிடும்வரை அப்பு வீட்டை விட்டு நகரவே நகராது. சிவகாமி கிணற்றடியில்தான் மீன், கறி போன்றவற்றைச் சுத்தம் செய்வாள். அப்போது, அப்பு அவள் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு அவளையும், மீன் சட்டியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு இருக்கும். அப்புவை நம்பி மீன் சட்டியை அங்கேயே வைத்துவிட்டு உள்வேலை பார்க்க வரலாம். அந்த அளவுக்கு நம்பிக்கையானது! சிவகாமி வரும்வரை காக்கைகளையும், பூனைகளையும் மீன் சட்டியை நெருங்க விடாமல் விரட்டி காவலிருக்கும். சுத்தம் செய்யும்போது அவள் தூக்கியெறியும் கழிவுகளை அன்றி வேறெதிலும் வாய் வைக்காது.

இன்று கழுவிக் குழம்பும் வைத்தாகிவிட்டது. இன்னமும் அப்புவைக் காணவில்லை. எங்கே போனது என்று தெரியவில்லை. ஆறுமுகம் சாப்பிட முடியாமல் தவித்தார். "காலையில் கீழத்தெருப் பக்கம் நாய் வண்டியைப் பார்த்தேன். கட்டிப் போட்டு வைக்கலாம் என்றுதான் அவசரமாக வந்தேன். அதற்குள் எங்கே போனதென்று தெரியவில்லையே!" என்று புலம்பியபடியே அரைகுறையாகச் சாப்பிட்டு முடித்தார்.

ஆறுமுகத்திடம் ஒரு பழக்கம். கறி, மீன் என்றால் தன் இலையில் பரிமாறப்படுபவற்றில் பாதியை அப்புவுக்கு என்று ஒதுக்கிவிடுவார். சிவகாமி அவரைக் கடிந்து கொள்வாள். "ஏன் இப்படி செய்கிறீர்கள்? அப்புவுக்கு ஒன்றும் போடாமல் பட்டினியா போடுகிறேன்? நீங்க சாப்பிடுவீங்க என்று வைத்தால் பிள்ளைக்கு ஒதுக்குவது போல் நாய்க்கு ஒதுக்கி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்" என்பாள்.

"பிள்ளையை விட அது ஒரு படி மேலேதான்! ‘நன்றி கெட்ட மகனைவிட நாய்கள் மேலடா’ என்று பாட்டு கேட்டதில்லையா நீ?" என்பார். அவ்வளவுதான்! சிவகாமிக்கு மகனின் நினைவு வந்துவிடும். இன்னும் திருமணமாகாமல் வீட்டில் இருக்கும் தங்கையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், வேலை கிடைத்த கையோடு, காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியவனின் சுயநலம் நினைவுக்கு வந்து மனதைப் பாரமாக்கும்.

(மீதி அடுத்த இதழில்)

About The Author