புரிந்து கொள்ள வேண்டும்

மதிய நேரம். அவரவர் டிபன் கேரியர்கள் திறக்கப்பட்டு, கலவையான உணவு வாசனைகள்.

"வாவ்! உருளைப் பொரியலா! பார்க்கவே கண்ணைப் பறிக்குது! டப்பாவை இங்கே நகர்த்துங்க சுப்பிரமணி!"

"என்னப்பா, ஏலக்காய் வாசனை?.. பாயசமா?.. வேலு! என்ன விசேஷம்? சொல்லவே இல்லியே!"

"என்ன சபாபதி! கேரியரைத் திறக்காமல் அப்படியே உட்கார்ந்து இருக்கீங்க?"

சபாபதி இறுக்கிப் பிடித்திருந்த மூடியைத் தட்டித் திறக்க முயன்றான்.

"பார்த்து! கொட்டப் போவுது. உள்ளே, ஸ்பெஷல் ஐட்டம் ஏதாச்சும் இருக்கப் போவுது."

"சபாபதி வீட்டுலயா!"

பளிச்சென்று கேலி வந்து விழுந்து விட்டது. வாஸ்தவம்தான். கேரியரைத் திறந்தால் மணத்தக்காளிக் கீரை, ரசம், மோர் சாதம்.

"என்னப்பா பத்திய சமையல்!"

மற்றவர்கள் கவனம் திசை திரும்பி விட்டது. சபாபதிக்கு மட்டும் பொருமல் தணியவில்லை. மஞ்சுளா திருந்தவே மாட்டாள். ச்சே! இவளால் மானம் போகிறது. ‘வழ.. வழ’ சமையலைச் செய்து அனுப்பவில்லை என்று எவன் அழுதது! குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டான்.

"சபாபதி! உனக்கு ஃபோன்."

எழுந்து போனான். அப்பாதான்.

"இன்னிக்கு ரிப்போர்ட் தரேன்னு சொன்னாங்க… டாக்டரைப் பார்த்துட்டு வந்துடறியா?… ஞாபகப்படுத்தலாம்னு ஃபோன் பண்ணேன்."

"சரிப்பா!"

வைத்து விட்டு வந்தான். ரிப்போர்ட் அம்மாவுக்குத்தான். ஒரு வாரமாய், உடல் அசதி என்கிறாள். உடம்பு வேறு திடீரென்று பெருத்துக் கொண்டு போகிறது. எல்லா டெஸ்ட்டும் பண்ணிரலாம் என்று டாக்டர் அட்வைஸ்.

ரிப்போர்ட்டைப் பார்த்த டாக்டர் முகத்தில் தெளிவு.

"ஒண்ணும் கவலைப்படாதீங்க! சர்க்கரையைக் குறைக்கச் சொல்லுங்க, போதும்!"

கூடவே மருந்துப் பட்டியலும். வீட்டுக்கு வந்தான். அம்மா சபாபதியைப் பார்த்ததும் எழுந்துகொள்ள முயன்றாள்.

"நீங்க ஏன் சிரமப்படறீங்க? அவ எங்கே ஒழிஞ்சா?" என்றான் லேசான எரிச்சலுடன்.

"டாக்டர் என்ன சொன்னார்?"

அப்பா பின்னாலேயே வந்தார்.

"ஒண்ணும் பயப்பட வேணாம்! சர்க்கரை கண்ணுலயே காட்டக் கூடாதுன்னார்."

"மாமா! உங்களுக்கும் காப்பி கொண்டு வரட்டுமா?" மஞ்சுளா முகம் துடைத்தபடி வந்தாள்.

"கொண்டு வா! ஆ.. இரு! சர்க்கரை போட வேண்டாம்!" என்றார்.

"அம்மாவுக்குத்தானே பிரச்சனை. நீங்க போட்டுக்கிட்டா என்ன?" என்றான் சபாபதி.

"பரவாயில்லைடா! நானும் பழகிக்கிறேன்."

இருவரும் பரஸ்பரம் புன்னகைத்துக் கொண்டனர். அம்மா சொன்னாள், மஞ்சுளாவைக் காட்டி.

"பாவம்! ஒரு வாரமா வயிற்று வலியில் துடிக்கிறா. அசிடிடின்னு டாக்டர் சொன்னாராம். மணத்தக்காளிக் கீரை சாப்பிடுன்னு எதிர் வீட்டுப் பாட்டி சொல்லியிருக்காங்க. சமையல் செய்ய முடியாம துடிச்சுப் போயிட்டா வலியில."

காப்பியுடன் வந்தவளைப் பார்த்தான். வலியையும் மீறிச் சமைத்து அனுப்பி இருக்கிறாள். எனக்கும் அப்பாவுக்கும்தான் எத்தனை இடைவெளி, புரிந்து கொள்வதில்… அனுசரித்துப் போவதில்!

"வரியா? டாக்டர்கிட்டே போயிட்டு வந்திரலாம்!" என்றவனை அப்பாவும் அம்மாவும் அர்த்தத்துடன் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர்.

About The Author

2 Comments

  1. Ravi, Madipakkam

    ரிஷபன்,

    உண்மையான அன்பை இந்த உலகம் மிகவும் தாமதமாகவே புரிந்துக் கொள்கிறது. நல்ல கருத்துள்ள கதை.

    ரவி.

  2. vani

    ரொம்ப நல்ல கருத்து இதை அனைவரம் பின்பட்ரலாம்.

Comments are closed.