ஆயா சொன்ன கதைகள் (2)

இதில் ஆக மோசமான விஷயம், அவளுக்கு யாரையுமே பிடிக்கவில்லை. காலம் பூராவும் அவள் பசித்துக் கிடந்தாளே, அதனால் இருக்கலாம். அவள் யாரையுமே காதலிக்கவில்லை. ஆண்களை, தனது சொந்தக் குழந்தைகளை, என்னை… நான் அவள் கதைகளை எத்தனை சமத்தாய்க் கேட்டுக்கொள்கிறேன்… என்னையும் கூட அவள் நேசிக்கவே இல்லை. ஒருத்தருமே இல்லை அவள் நேசத்தில். அவளை அவளுக்கே பிடிக்கவில்லை. அவளது சின்ன வயசிலேயே பசி என்னும் ராட்சஸன் அவளைப் பிடித்துக்கொண்டு விட்டான். அப்படி ஒருத்தன் இருக்கிறானா தெரியாது. ஆனால் அப்படித்தான் தெரிகிறது எனக்கு.

வீட்டில் சாப்பிட எதுவும் இல்லாது போனால் ஆயா ஆத்திரக் குமுறலாய் உணர்வாள். சில சமயம் ஆத்திரத்தில் என்னை அறைந்திருக்கிறாள். அந்தக் கண்கள் கொதித்துச் சிவக்கும். என்ன கடூரமாய் விநோத உக்ரமாய்க் காணும் அவை. ஒரு ரொட்டித் துண்டுக்காக யாருடைய கழுத்தையும் கடித்துத் துப்ப அவள் தயங்கமாட்டாள் என்றிருக்கும். மேசையில் சிதறிக்கிடக்கிற மிச்ச மீதி உணவுத் துணுக்குகளை கவனமாய்ப் பொறுக்கி ஒரு வெறியுடன் என் வாயில் அடைப்பாள் அவள். எப்பவுமே அளவில்லாமல் ரொம்ப அதிகமாய் அவள் சமைப்பாள். எல்லாவற்றிலும் கொழுப்பு மிதக்கும். ஒரு பந்தின் திரட்சியாய் கொழுப்பு தனியே மேலே மிதக்கும். கூழில் அது மாத்திரமே மேல் படலமாய் மிதக்கும். அடியில் சாறைப் பார்க்க முடியாது. பன்னிக் கொழுப்பு அவளுக்கு விருப்பம். அலமாரியில் பன்னிக் கொழுப்பை நிறைய அரை லிட்டர் ஜாடிகளில் எடுத்து வைத்திருப்பாள். அலமாரியில் பன்னிக் கொழுப்புடன் ஏராளமான ஜாடிகள் அணிவகுத்திருக்கின்றன. அதேபோல கொடுக்காப்புளி அடைத்த நிறைய நிறைய ஜாடிகள். உறியிலும் கூட அவைதாம். புதிய பழைய கொடுக்காப்புளிச் சுருள்கள். அப்படியே அங்கேயே எடுக்கப்படாத பழைய சுருள்கள். சில நான் பிறக்குமுன்பே பறித்தவை.

பசி. பசி தந்த திகில்… அதுவே ஆயாவை, அவள் வாழ்க்கையை நடத்திச் சென்றது. கோடையில் விடாமல் மழைபெய்ய ஆரம்பிக்கையில் ஆயா தோட்டத்துக்கு வந்து உட்கார்ந்துகொண்டு, ஆ.. இனி இந்த உருளைக் கிழங்குக்கு என்னவாவும் பார்… இந்த கொடுக்காப்புளி, பீட்ரூட், இந்தச் சோளம்… எல்லாமே நாசமாப் போகப்போகுது… என அரற்ற ஆரம்பிப்பாள். கடவுளே, இனி எங்க நிலைமை என்ன? நாங்க எல்லாருமே பட்டினியால் செத்துற வேண்டியதுதானா?

ஒரு சமயம், எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, ஆயாவுக்குள் இருந்த பசி என்னும் ராட்சஸன் வந்து என்னைப் பிடித்துக்கொண்டான்.

எப்பவுமே எனக்கு சாப்பாட்டைப் பற்றி பெரிய கவனமெல்லாம் கிடையாது. எப்பவுமே என்ன இருக்கோ சாப்பிட்டுக் கொள்வேன். சில சமயம் எதோ கொறிப்பேன். சில சமயம் ஒரு கட்டு கட்டுவேன்… என்றாலும் தனியே அதற்கான ஆர்வம், அலைச்சல் என்னிடம் இல்லை. ஆனால் எனக்கு எதோ ஆனது அன்றைக்கு. வழக்கத்துக்கு மாறாக அன்றைக்கு நெடுநேரம் தூங்கிவிட்டேன். மதியம் வந்துவிட்டது. அன்றைக்கு கண்ணைப் பிட்டுக்கொள்ள முடியாமல் கெட்ட கனவுகளின் ஆகர்ஷணத்தில் அமுங்கிக் கிடந்தேன்.

விழிப்பு வந்தது. படுக்கையை விட்டே என்னால் எழுந்துகொள்ள முடியவில்லை. கோடைகால கூழ் எனக்காக சமையல் அறையில் ஆயா கடைந்துகொண்டிருந்தாள். உண்மையிலேயே ருசியான கூழ். கிண்டிக்கொண்டிருக்கிற அந்தக் கூழின் மணம் இப்போது கூட என் நாசியில் தட்டுகிறது. அங்கே வரை போகக்கூட என்னிடம் தெம்பு இல்லை. நம்பவியலாத அளவு மகா பசி பசித்தது எனக்கு. எழுந்துகொள்ள சமையல் அறைவரை போக என்னால் இயலவில்லை.

என் வயிற்றுக்குள் திடுமென ஒரு பள்ளம் உருவானது. ஆழமான செங்குத்துப் பள்ளம். ஆ நான் அதனுள் குப்பறத் தட்டி விழுந்துகொண்டிருந்தேன். என் வயிறே நானானது. நானே வயிறாகி விட்டேன். என்ன அகோரப் பசி. அந்த நிலையில் அருகேயிருக்கிற மேசையின் விரிப்பைக் கூட கடித்துத் தின்னுருவேன் போலிருந்தது. ஷு லேசைப் பார்க்க நூடுல்ஸ் போலத் தெரிந்தது.

அதன்முன்னோ பின்னோ கூட அப்படி எனக்குத் தோன்றியதே இல்லை. ஒரு நடமாடும் பிணத்தைப் போல நான் சமையல் கூடத்துக்கு படுக்கையை, சுவரை என்று கிடைத்ததையெல்லாம் பிடித்தபடி போய்ச்சேர்ந்தேன். ஆயாவுக்கு ஒரு வணக்கம் கூட சொல்லவில்லை. நான்பாட்டுக்குப் போய் சாப்பாட்டு மேசையில் அமர்ந்தேன். என் நிலைமையைப் பார்த்த ஜோரில் ஆயா புரிந்துகொண்டாள். உடனே ஒரு கிண்ணத்தில் கூழூற்றி என்முன் கொண்டுவந்தாள். அதை அப்படியே கடகடவென்று நான் முழுங்குவதைப் பார்த்தாள். அதை சுவைத்து குடிக்கவில்லை கடகடவென்று முழுங்கினேன் ஆவேசத்துடன். என்னைப் பார்த்து அவள் பரவசப்பட்டாள். நான் அவளைப்போல அப்போது நடந்து கொண்டிருந்தேன். என்னைப்போலவே பசியெனும் ராட்சஸனின் பிடியில் இதோ என் வாரிசு…. என அவள் புளகாங்கிதப் பட்டிருக்கலாம். ஆ நானும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறேன். நாங்கள் இருவருமே அப்படி அலைக்கழிக்கப் பட்டுவிட்டோம்.

தாத்தா இறந்தபின் ஆயா என்னை தாத்தாவின் படுக்கையிலேயே படுத்துறங்கச் சொன்னாள். நான் எப்ப ஆயாவைப் பார்க்கப் போய்த் தங்கினாலும் ஆயா எனக்கு படுத்துக்கொள்ள அந்தப் படுக்கையையே தந்தாள். அதில்தான் தாத்தா செத்துப் போனார். ஆனால் அதைப்பற்றி ஆயா அலட்டிக்கொண்டது இல்லை. அவளை விடு, நானே அவளிடம் சொன்னேன், அவளைப் போல நான் இல்லை. எனக்கு அதில் படுத்துறங்க என்னவோ போலிருக்கிறது. கெட்ட கெட்ட கனவுகள். பயமாய் இருக்கிறது. ஆனால் என் பேச்சை அவள் காதிலேயே போட்டுக் கொண்டமாதிரி தெரியவில்லை. நான் சொன்னது அவளுக்கு விளங்கவில்லை. என் கன்னா பின்னா கனவுகள் தொடரத்தான் செய்தன.

என் பன்னிரண்டாவது வயதில்தான் எனக்கு ஆயாவை விட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, எவ்வளவு தூரம் முடியுமோ ஓடிப்போய்விட உத்வேகம் வந்தது.

நானும் ஆயாவும் தோட்டத்தில் கொடுக்காப்புளி பொறுக்கிக் கொண்டிருந்தோம். இதமான ஆகஸ்டு நாள் அது. ஆயா தன் அடுத்த கதையைச் சொல்லிக் கொண்டிருந்தபோது நான் கொடுக்காப்புளி தோலையுரித்து கும்பாச்சியாய்க் குவித்தபடி கதைகேட்டுக் கொண்டிருந்தேன். அதை கோணியில் போட்டு வெளி முற்றத்துக்கு அவள் கூடவே எடுத்துப் போனேன். அப்போதுதான் அந்த கருத்துவாதம் எங்களுக்குள் எழுந்தது. ஆயா கதையைத் தாண்டி ஒரு விஷயத்தை ஒத்துப் பேசினாள். ஒருவேளை நான் இந்த வாழ்க்கை தாண்டி மேலுலகம் பற்றி எதோ சொல்ல வந்திருக்கலாம். சொர்க்கம். நரகம். ஆத்மா. அப்போது இல்லை என்றாலும் பின்னாட்களில் இப்படியெல்லாமான பேச்சு எனக்குப் பிடித்துப் போயிற்று.

ஆயா திடீரென்று சொன்னாள்.

”ஆத்மாவாவது வெங்காயமாவது. ஆத்மான்னு இல்லடி, எனக்கு எதுலயுமே நம்பிக்கை கிடையாது. ஒராள் செத்துப் போகிறான். பிறகு அவன் எலும்புகள் சிதைந்து போயிருது. அதுதான் முடிவு. ஒரு காலம். அதன் முடிவு. அவ்ளோதான். அதுக்கு மேல எதுவுங் கிடையாது.”

”ஆயா…” என்றேன். ”அப்பிடி ஒண்ணில்லன்னு சொல்லாதே. அப்படி நினைக்கவே என்னவோ போலிருக்கு எனக்கு. உனக்கு மரணபயமே கிடையாதா ஆயா. உன் எலும்பு சிதைந்து உருக்குலைந்து அழிஞ்சிருதுன்றது பயமா இல்லியா உனக்கு?”

”இதுல பயப்பட என்ன இருக்கு? அது அப்பிடித்தான்…”

”பின்ன எதுக்கு நாம வாழறோம். அதன்பின் ஒண்ணுமே இல்லைன்னா வாழறது எதுக்குன்றேன்.”

”வாழ ஒண்ணில்லைன்னா சொல்றது? பாருடி, நீ இருக்கியே… நீ என் வாழ்க்கையை ஞாபகம் வெச்சிக்குவே. என் மொத்த வாழ்க்கையையுமே நான் உனக்குச் சொல்லியாச்சி. அதுக்கெல்லாம் அழிவு கிடையாது. இல்லியா?”

ஆகா, அப்போதுதான் எனக்கு உடனே ஓடிப் போக வேண்டுமாய் இருந்தது. கொடுக்காப்புளியைத் தோலுரிப்பதை அப்படியே கைவிட்டேன். ஓடிப் போனேன். ஆயாவை விட்டு ஓடிப்போனேன். அவள் வாழ்க்கையை விட்டு என் வாழ்க்கையை நோக்கி ஓடினேன் நான். அவள் என்னை அழித்து தான் அழியாமல் இருப்பதை நான் விரும்பவில்லை. எனக்கு என் வாழ்க்கை வேண்டும். என் சொந்தக் கதைகள் வேண்டும். அப்படி ஒருத்தரை அழித்து அடுத்தவராக அடையாளமற்று அடிப்பது, காயடிப்பது தகாத செயல். எனக்கும் வாழ்க்கை வேண்டும். சாகா நிலையான சொந்தக் கதைகள் வேண்டும். அட அவளுக்கு எதுலயுமே நம்பிக்கை இல்லை. நானும் அப்படி ஆவதா? மாட்டேன்…. நான் சிந்தித்தபடி ஓடிக் கொண்டிருந்தேன்.

இப்ப எனக்கு வயசு முப்பது. ரொம்ப காலம் முன்னாடியே ஆயா இறந்துவிட்டாள். அவள் சாவுக்கு நான் போகவில்லை. ஆனாலும் அவளிடம் இருந்து என் சுயம்புத்தன்மையைக் காப்பாற்றிக்கொள்ள என்னால் முடியவில்லைதான். நான் கொஞ்சம் முன்னாடியே வெளியேறியிருக்கவேண்டும். ரொம்பத் தாமதித்து விட்டேன். என்னிடம் இப்போது என் கதைகள் இல்லை. எல்லாம் அவள் சொன்ன, அவளது கதைகள். அவையே என் கைவசம் இப்போது இருக்கின்றன. மற்றவர்களிடம் நான் என் ஆயா கதையைத்தான் சொல்லி வருகிறேன். எனக்கு அது பிடிக்கத்தான் இல்லை. பேச ஆரம்பித்தால் தன்னைப்போல நான் ஆயா கதைகளை ஆரம்பித்து விடுகிறேன். தவிர்க்க முடியவில்லை. ஆனால் எனக்குள் கதை சொல்கிற அந்த உத்வேகம் இருக்கத்தான் செய்கிறது. கதை சொல்கிறபோது எனக்கு ஒரு சுகம் கிடைக்கிறது. கதை சொன்னபடி நான் அழுகிறேன். அழுகை எனக்குப் பிடித்திருக்கிறது. நின்று என் கதையை நீங்கள் கேட்டுவிட்டுப் போங்கள். கொஞ்சம் செவிகளை எனக்குத் தாருங்கள். கொஞ்சமே கொஞ்சம். விலகிப் போகாதீர்கள். ஒரு நிமிஷம் நின்று என்னைக் கேளுங்கள். யுத்த சமயம். ஆயா ஒரு ராணுவ ஆஸ்பத்திரி சமையல் கூடத்தில் வேலையாய் இருந்தாள். அப்ப என்னாச்சி, ஒரு பெரிய அண்டாவை அவள் கழுவிக் கொண்டிருந்தபோது அப்படியே அதனுள் விழுந்து அசதியில் தூங்கிப் போனாள்…

மூலம் : உக்ரேனிய மொழியில் தானியா மல்யார்சக்

ஆங்கிலத்தில் : மைக்கேல் எம். நேதன்
தமிழில் : எஸ்.ஷங்கரநாராயணன்

About The Author