எஸ்.. எம்…எஸ்!” (2)”

மெசேஜ் அனுப்பியவன் யார் என்று புரிபடவில்லை. தவறுதலாய் வந்து விட்டதா? அப்படியானால் ஏன் இரண்டு முறை அனுப்ப வேண்டும்? மறுபடியும் மெசேஜ் டோன். ‘உன்னைப் பார்த்தது நான் இல்லை. என் கண்கள். உன்னைப் பார்த்தபின்போ நானே இல்லை!’ கண்றாவி கவிதை.

கோபத்தில் அழிக்கப் போனேன். சட்டென்று எனக்குள் ஒரு குழப்பம். புனிதாவிடமே கேட்டு விடலாமே. என் செல்லுக்கு அழைப்பு விடுத்ததில் ‘நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் வாடிக்கையாளர் இப்போது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்’ என்றது ஒரு முறை. அடுத்த தடவை முயற்சித்ததில் பிஸி டோன். அதற்குள் அலுவலக வேலைகள் வந்து விட என் கவனம் திசை மாறியது. மாலை ஐந்து மணிக்கு சங்கரன் ஞாபகப்படுத்தினார்.

"செல்லை மறக்காம எடுத்துக்குங்க"

சட்டைப்பையிலிருந்து எடுத்துக் காட்டினேன். இன்னொரு மெசேஜ் வந்திருந்தது. ‘கடவுள் காதலைப் படைத்தபோது உன்னைப் பார்த்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் காதல் இத்தனை அழகானதாய் இருக்குமா?!’

ராஸ்கல். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் மனதில். அவனைச் சும்மா விடக்கூடாது. செல்லை அழுத்தினேன். யூஸ் நம்பர்.. அழைப்பு போனது. ஏதோ பாட்டு ஒலித்தது. உடனே அவன் குரல்.

"நினைச்சேன். நீ நிச்சயம் •போன் பண்ணுவேன்னு.."

அந்த நிமிடம் ஏனோ என் குரல் கோபத்தில் பிசிறியது. என் இரட்டைக் குரலில் ஒன்றான பெண் வாய்ஸில் கேட்டேன்.

"என்ன இது விளையாட்டு"

அவன் சிரித்தான்.

"ஏன் பிடிக்கலியா. வேற என்ன விளையாடறதாம்"

என் கோபம் எல்லை மீறியதில் வாயடைத்துப் போனது.

"என்ன பேசலே.. ஓ.. யாராச்சும் வந்துட்டாங்களா.. ஓக்கேடா டார்லிங்.. அப்புறம் பேசலாம்" துண்டித்து விட்டான்.

வீட்டுக்குள் நுழைந்ததும் புனிதா சொன்னாள்.

"வசந்திக்கு பத்து பைசா கனெக்ஷன் போட்டிருந்தேன். நீங்க எடுத்துகிட்டு போயிட்டீங்களா.. இதுல பேசினதுல அநியாயமா முப்பத்தஞ்சு ரூபா ஆயிடுச்சு" எதுவும் சொல்லாமல் அவளுடைய செல்லை நீட்டினேன். வாங்கி வைத்து விட்டாள் அலட்சியமாக.

காப்பி சூடாக இறங்கியது. சிறிது நேரம் பேப்பர் பார்த்து விட்டு குளிக்கப் போனேன். தலையைத் துவட்டிக் கொண்டு வெளியே வந்தபோது புனிதா கேட்டாள்.

"யாரது.. மூணு மெசேஜ் வந்துருக்கு"

"என்னவாம்"

"பேத்தல்.."

படுத்ததும் தூங்கிப் போகிறவன் அன்று புரண்டு கொண்டே இருப்பதைப் பார்த்து புனிதா கேட்டாள்.

"என்ன ஆச்சு உங்களுக்கு.. உடம்பு எதுவும் சரியில்லையா?"

"ப்ச்"

"டைஜின் வேணுமா"

ஜீரணிக்க முடியாத ஒரு எரிச்சலில் நான் இருப்பது வாஸ்தவம்தான். ஆனால் இதற்கு டைஜின் போதாது.

"நீ தூங்கு"

வெளியே ஹாலுக்கு வந்தேன். டிவி சானல் மாற்றிக் கொண்டே இருந்ததில் அதுவும் அலுத்தது. புனிதாவின் செல்லை எடுத்து இன்பாக்ஸ் பார்த்தேன். சமீபமாய் வந்திருந்த மெசேஜ் தவிர வேறெதுவும் இல்லை. அப்படியானால் இப்போதுதான் அனுப்பத் துவங்கி இருக்கிறானா.. அல்லது.. முன்பு அனுப்பியவை அழிக்கப்பட்டு விட்டதா. எப்படித் தெரிந்து கொள்வது? அவனையே கேட்டு விட்டால்..

என் கைகள் என் சிந்தனையே இல்லாமல் மீண்டும் மெசேஜில் இருந்த எண்ணை அழைத்தது.

"ஏய்.. செல்லம்.. மணி இப்ப என்ன தெரியுமா? என்ன தூக்கம் வரலியா"

சரியான அலட்டல் அவன் குரலில்.

"ம்.." என்றேன் கிறக்கமாய் என் பெண் குரலில்.

"என் மெசேஜ் எல்லாம் புடிச்சிருக்கா.."

"சகிக்கலே"

"ஏய்.. பொய்தானே சொல்றே.. இதுவரைக்கும் அம்பது மெசேஜ் அனுப்பியிருப்பேன்.. உனக்கு என் மேல பிரியம் வரணுமேன்னு எப்படி தவிச்சேன் தெரியுமா.."

"பொய்யி" என் குரல் கொஞ்சியது.

"பிராமிஸ்டா.. டேய்.. நீ என்கூட பேசணுமேன்னு.. ஹா.. என் கையை நானே கிள்ளிப் பார்த்துக்கணும்.."

எதிர்முனையில் அவன் சுத்தமாய் வழிவது புரிந்தது.

"டேய்.. செல்லம்.. உனக்கு என்ன வேணும்டா.. சொல்லு.. உன் அட்ரஸ் கூட எனக்குத் தெரியாதுடா.. பிளீஸ்.. உன்னை நேர்ல பார்க்கணும்போல இருக்குடா.. உன் வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்ரா.."

புலம்ப ஆரம்பித்தான். சட்டென்று துண்டித்து விட்டேன். அடுத்த நிமிடம் அவன் அழைப்பு. மறுபடியும் துண்டித்தேன்.

இப்போது மெசெஜ். ‘ஓக்கே.. புரியுது. யாரோ வந்துட்டாங்க. நாளைக்கு பேசலாம். ஆனா எனக்குத் தூக்கம் போச்சுரா’

உனக்கில்லை. எனக்குத்தான். எனக்குள் சுடர் விட்டெறிய ஆரம்பித்தது.. வன்மம்!

(தொடரும்)

About The Author