பொங்கல் ரிலீஸ் (2)

செந்திலின் முணுமுணுப்பு இன்னொரு உதவி டைரக்டரின் காதில் விழ, அவர் என்னவென்று விசாரிக்க, எருமை மாட்டின் கேமரா கோணத்த ரசித்துக் கொண்டிருந்த கேமராமேன் செந்திலின் சிபாரிசுக்கு வர, விஷயம் டைரக்டரின் காதுக்குப் போக, செந்திலைப் பக்கத்தில் கூப்பிட்டு, "ஒன் ஸிஷ்டருக்கு சைக்கிள் ஓட்டத் தெரியுமாப்பா" என்று கேட்டார் டைரக்டர்.

"சைக்கிள் இன்னா சார் சைக்கிள், நம்ப ஸிஷ்டர் எருமை மாடே ஓட்டும் சார்."

"எருமை மாடு ஓட்றது சரி தம்பி, இன்னிக்கி எருமை மாடு ஓட்றதுக்கு நம்ம ஹீரோயின் இருக்காங்க. ஒன் ஸிஸ்டருக்கு சைக்கிள் ஓட்டத் தெரியுமா, அதச் சொல்லு."

"தெரியும் சார்."

மீனாட்சியின் வசம் ஒரு லேடீஸ் பைக் ஒப்படைக்கப்பட்டது.

"இந்தாம்மா, நீ சைக்கிள்ள ஏறி அந்தக் கடேசிலயிருந்து வர்ற. இங்க ஹீரோயின் எரும மாட்டு மேலே வருவாங்க. எரும மாடு க்ராஸ் பண்றச்ச நீ சைக்கிள்ள பிரேக் புடிச்சி, கால ஊணி நின்னுக்கற. அவ்ளோதான்."

மீனாட்சி சந்தோஷமாய் சைக்கிளை வாங்கிக் கொண்டாள். மீனாட்சியைவிட செந்திலுக்குத்தான் அதிக சந்தோஷம். தன்னுடய தங்கை பாதி நட்சத்திரம் ஆகிவிட்டாள் என்று புளகாங்கிதமடைந்தான்.

கதாநாயகி காரில் வந்து இறங்குகிற காட்சி படமாக்கப்பட்டது. பின்னால், எருமை மாட்டுச் சவாரிக் காட்சிக்கு ஒத்திகை பார்க்கப்பட்டது. செந்தில் மற்றும் எருமை மாட்டின் ஒத்துழைப்புடன் ஒத்திகை ஓக்கே. பிறகு உண்மையான டேக்.

கதாநாயகனும் மூன்று நண்பர்களும் கேமராவின் ஒரு மூலயில் சிரித்துக் கொண்டு நிற்க, துண நடிக நடிகைகள் தங்கள் ரோலுக்குத் தயாராயிருக்க, புத்தம்புது துண நடிகை மீனா, சைக்கிளோடு காத்திருக்க, காட்சிக்கான க்ளாப் அடிக்கப்பட்டது.

ஒத்திகையின் போது எருமையாய் ஒத்துழைத்த அருமைக்கு… மன்னிக்க… ஒத்திகையின் போது அருமையாய் ஒத்துழைத்த எருமைக்கு, க்ளாப் அடிக்கப்பட்டதும் மூடு கிளம்பிவிட்டது.

கதாநாயகியைச் சுமந்து கொண்டு எருமை வேகத்தில் கிளம்பின மாடு, திடீரென்று வேகமெடுத்துச் சீட்டா வேகத்தில் சிட்டாய்ப் பறந்தது. கிலி பிடித்துக் கதாநாயகி அலற, படப்பிடிப்புக்குழு பரபரப்படைய, எருமை க்ராஸிங்கிற்கு சைக்கிளில் காலூன்றி நின்ற மீனாட்சி, சுதாரித்துக் கொண்டு ஆக்க்ஷனில் இறங்கினாள்.

சைக்கிளை செம அழுத்து அழுத்தி, எருமை மாட்டைத் துரத்தினாள். கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேறித் தலதெறிக்கத் தெருவில் ஓடிய எருமை மாட்டை, முக்கால் கிலோ மீட்டர் விரட்டிச் சென்று மடக்கிய மீனாட்சி, வெற்றிகரமாய்க் கதாநாயகியை மீட்டுக் கொண்டு வந்தாள்.

கதாநாயகி ஆரோகணித்துப் போன எருமையில் மீனாட்சியும், மீனாட்சியின் சைக்கிளில் கதாநாயகியுமாய், ஒரு ரசிகர் பட்டாளம் புடைசூழ ஒரு வழியாய் வந்து சேர்ந்தார்கள். முழுசாய்த் திரும்பி வந்த கதாநாயகியை எல்லோரும் மொய்த்துக்கொண்டு குசலம் விசாரித்தார்களேயொழிய, அவளை மீட்டு வருவதில் சாகசம் புரிந்த தன்னுடய தங்கையை யாருமே கண்டு கொள்ளவில்லை என்பது செந்திலுக்கு ரொம்ப வருத்தமாயிருந்தது.

எருமை மாடு ஒழுங்கீனமாய் நடந்து கொண்டதற்கு தன்னை யாரும் கடிந்து கொள்வார்களோ என்று யோசனயாயிருந்த செந்திலின் பக்கத்தில் வந்த கேமராமேன் தட்டிக் கொடுத்தார்.

"ஷாட் ஓக்கே தம்பி, ரொம்ப ரியலிஸ்ட்டிக்கா வந்திருக்கு. வீட்டுக்குப் போய் மாட்டுக்கு திருஷ்டி சுத்திப் போடு."

ஷூட்டிங் முடிந்து, அங்கேயே எல்லாருக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது. மட்டன் சிக்கன் வகையறாக்களை நெற்றி வரைக்கும் ஒரு பிடி பிடித்தான் செந்தில். அஞ்சு நட்சத்திர சாப்பாட்டை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த தங்கையைப் பார்க்க செந்திலுக்குப் பெருமையாயிருந்தது. என்ன மாதிரியொரு சாதனையை இன்றைக்கு நிகழ்த்தியிருக்கிறாள்!

ஒரு சினிமா நட்சத்திரத்துக்கு வேண்டிய எந்தத் தகுதி இவளிடம் இல்ல? இவளை ஒரு நட்சத்திரமாக்கிவிட முயற்சி செய்தால் என்ன? நம்ம ஸிஷ்டரை ஒரு இஷ்டார் ஆக்கிவிட முயற்சி மேற்கொண்டாலென்ன?

சாப்பிட்டு முடித்துவிட்டு, ஒரு மரத்தடியில் நாற்காலிகள் போட்டு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த ப்ரடியூசர், டைரக்டர், கதாநாயகி, கதாநாயகியின் அம்மா அடங்கிய குழுவை மெதுவாய் சமீபித்தான் செந்தில்.

சார் என்றான் டைரக்டரை நெருங்கி. தலையை உயர்த்திப் பார்த்தார் டைரக்டர்.

"என்னப்பா, ஒன் எருமை மாட்டுக்கு ஷாட் முடிஞ்சிப் போச்சுப்பா. சாப்ட்டியா? பணந்தரச் சொல்றேன். வாங்கிட்டு நீ கௌம்பலாம். மேடம் தான் பாவம் பயந்துட்டாங்க."

"சார் நம்ம ஸிஷ்டர்…" என்று இழுத்தான் செந்தில். அந்த இழுப்புக்கு டைரக்டர் ஒரு பதில் வைத்திருந்தார்.

"ஒன் ஸிஸ்டருக்கு எக்ஸ்ட்ரா ஒரு நூறு ரூவா தரச் சொல்லியிருக்கேம்ப்பா. மொத்தம் முன்னூறு ரூவா தருவாங்க. அஸிஸ்ட்டன்ட் டைரகடர்ட்ட வாங்கிக்க."

"அதில்ல சார், நம்ம ஸிஸ்டருக்கு ஒரு சினிமா சான்ஸ்…"

"அதான் குடுத்தாச்சில்லப்பா."

"அந்த சான்ஸ் இல்ல சார். ஈரோயின் சான்ஸ் சார்."

செந்தில் சொல்லி வாயை மூடவும் கோரஸாய் அங்கேயொரு குபீர்ச் சிரிப்பலை எழுந்தது. அலையில் தூக்கலாய்த் தெரிந்தது கதாநாயகி நடிகையின் சிரிப்பு. செந்திலுக்கு அந்தக் கிண்டல்ச் சிரிப்பு சங்கடத்தைக் கொடுத்தாலும், அவன் மனந் தளர்ந்துவிடவில்ல.

தன்னுடய கோரிக்கையிலிருக்கிற நியாயத்தை அவன் டைரக்டரின் முன் வைத்தான். "சார், எங்க சேரிலயே காலேஜ்க்குப் போய்ப் படிக்கிறது நம்ம ஸிஷ்டர் ஒண்டிதான் சார்."

"அது சரிப்பா, காலேஜ்க்குப் போய்ப் படிக்கிறது நடிகையாறதுக்கு ஒரு தகுதியா தம்பி? பாக்க செகப்பா, லட்சணமா இருந்தாத்தான மார்க்கெட்ல எடுபடும்!"

"இப்ப இருக்கற நடிகங்கள்ளாம் செகப்பாவா சார் இருக்காங்க?"

"நடிகன் ஆம்பள தம்பி. ஆம்பள கருப்பா இருக்கலாம், அசிங்கமா இருக்கலாம், தாடி வளத்துட்டு இருக்கலாம் அதையெல்லாம் ஜனங்க இப்ப ஏத்துக்கிட்டாங்க. ஆனா நடிகைன்னா செக்கச் செவேல்னு இருக்கணும், பளிச்னு இருக்கணும், சுண்டியிழுக்கறமாதிரி அழகா இருக்கணும்னுதான் இன்னும் ஜனங்க எதிர் பார்க்கறாங்க" என்று செந்திலுக்கு விளக்கிக் கொண்டே போன டைரக்டரை இடை மறித்தாள் கதாநாயகி.

"நீங்க என்ன சார் ரொம்ப ஸீரியஸ்ஸா இவனுக்கு எக்ஸ்ப்ளெய்ன் பண்ணிட்டிருக்கீங்க” என்றவள், செந்திலை நோக்கி, “ஏம்ப்பா ஒம்ப்பேர் என்ன?" என்று அலட்சியமாய்க் கேட்டாள்.

அந்த நடிகை மேலே இவனுக்கு மரியாதை ஏதும் இல்லையானாலும், வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அவளிடமும் ரெண்டு வார்த்தை சொல்லி வைப்போமே என்று நினப்பு ஓடியது.

"எம்ப்பேர் செந்தில் மேடம். நம்ம ஸிஷ்டர் பேர் மீனாச்சி. அதாவது மீனா. இப்ப மீனாங்கற பேர்ல மெய்யாலுமே ஒரு நடிகை இருக்கங்காட்டி, நம்ம ஸிஷ்டர் பேர மைனான்னு மாத்திக்கலாம் மேடம். ரசிகங்களுக்கு கன்பூசன் வேணாம்."

திரும்பவும் ஒரு ஏளனச் சிரிப்பு சிரித்தாள் நடிகை. பிறகு இவனிடம் கேட்டாள், "செந்தில், நீ பசின்னு ஒரு படம் பாத்திருக்கியா?"

"ஓ, பாத்திருக்கேனே! சோபா நடிச்ச படம். மூணு தபா பாத்திருக்கேன்." செந்தில் உற்சாகமாய்ச் சொன்னான்.

அந்த உற்சாகத்தின் உச்சி மண்டையில் நறுக்கென்று ஒரு குட்டு வைக்கிற மாதிரி அந்த நடிகை சொன்னாள். "அந்த பசி மாதிரி ஒரு சேரிக்கதையைப் படமா எடுக்கறச்ச ஒன் ஸிஷ்டருக்குச் சொல்லி விடுவாங்க, இப்ப நீ ஒன் ஸிஷ்டரையும் ஒன் எருமை மாட்டையும் இட்டுக்கினு ஒன் சேரிக்கிப் போய்ச் சேரு."

செந்திலுக்கு மூஞ்சி செத்து விட்டது. இந்த நேரம் பார்த்தா மீனாட்சி அங்கே வந்து சேர வேண்டும்! மீனாட்சியின் முன்னிலையில் இந்த நடிகை இப்படி அவமானகரமாய்ப் பேசி விட்டாளே என்று துயரமாயிருந்தது. இவர்கள் கொடுக்கிற முன்னூறு ரூபாயக் கூட நிராகரித்து விடலாமா என்று யோசித்தான்.

வேண்டாம். இந்த நடிகையைத் தவிர மற்றவர்களெல்லாம் இங்கே நல்லவர்களாய்த்தான் தெரிகிறார்கள். டைரக்டர் நல்லவராய்த்தான் இருக்கிறார். அந்தக் கேமரா மேன் கூட.

இந்த நடிகை இவளிடம் அநாகரிகமாய் நடந்து கொண்டதற்காக இவன் மற்றவர்களிடம் நாகரீகக் குறைவாய் நடந்து கொள்ளக் கூடாது. பணத்தைப் பெற்றுக் கொண்டு நடந்தான், மீனாட்சி யோடும் எருமை மாட்டோடும்.

தங்கையின் முகத்தைப் பார்க்கக் கூச்சமாயிருந்தது. அவளின் கண்களை சந்திக்காமலேயே அவளிடம் சொன்னான், பஸ்ஸில் வீட்டுக்குப் போய்விடும்படியும், தான் மாட்டோடு நடந்து வருவதாயும்.

வேணாண்ணா, நானும் நடந்தே வறேன். பேசிக்கினே போவலாம் என்று அவள் அவனுக்கு இணயாய் நடந்தாள்.

சில நிமிஷங்கள் கழித்து அண்ணனிடம் கேட்டாள். "என்னண்ணா, பேசிக்கினே போவலாம்னுதான ஒன்னோட வாறேன். நீ என்னத்தயோ தொலச்சிட்ட மாதிரி தல குனிஞ்சிக்கினே வாறியே?"

தங்கையை செந்தில் ஏறெடுத்துப் பார்த்தான். பிறகு மனசிலிருந்த பாரத்த இறக்கி வைத்தான்.
"அந்தத் திமிர்ப்புடிச்ச சினிமாக்காரி இன்னா ராங்கா பேசிப்புட்டா ஸிஷ்டர்! எனக்கு வாற கோவத்துக்கு…"

"என்ன, என்ன செய்யப் போற ஒங் கோவத்துக்கு?"

"நீ வேணா பார் ஸிஷ்டர், அந்த டைரக்டர் நல்ல மனுஷன்தான், அந்த ஆள நா திரும்பவும் போய்ப் பாக்கத் தான் போறேன்."

"பாத்து? திரும்பவும் எனக்கு சினிமா சான்ஸ் கேக்கப் போறியாக்கும்? என்ன சினிமாவுல சேத்துவுடுண்ணான்னு நா ஒன்னக் கேட்டனா? ஒனக்கு எதுக்கு வேண்டாத வேலை?"

"இந்த தபா ஒனக்கு சான்ஸ் கேக்கப் போறதில்ல ஸிஷ்டர். சான்ஸ் எனக்கு."

"ஹ! ஒனக்கா!"

"ஆமா எனக்குத்தான். கதாநாயகன் சான்ஸ் இல்ல. வில்லன் சான்ஸ். கதாநாயகியா இந்த திமிர்ப் புடிச்ச நடிகையையே போடச் சொல்லுவேன். படத்துல கற்பழிக்கிற சீன் ஒண்ணு வைக்கச் சொல்லுவேன். கற்பழிக்கிற சீன்ல இந்தத் திமிர்ப்புடிச்சவளைக் கதறக் கதறக் கற்பழிப்பேன். அவ அலற அலறக் கற்பழிப்பேன். அவ திமிரு அடங்கற வரைக்கும் கற்பழிப்பேன்."

செந்தில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசப் பேச மீனாட்சிக்குச் சிரிப்பு பொங்கிக் கொண்டு வந்தது.

வீதியென்றும் பாராமல் விழுந்து விழுந்து சிரித்தாள். அண்ணனின் தோள்களைப் பற்றிக் கொண்டு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். சுதந்திரமாய்ச் சத்தம் போட்டுச் சிரித்தாள்.

என்னமோ ஏதோ என்று திரும்பிப் பார்த்தது எருமை மாடு.

(க்ருஹஷோபா, ஜனவரி 2005)

About The Author

1 Comment

Comments are closed.