தமிழ் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்திருக்கும் சிம்ரன்திரையின் 5-வது குறுந்தொடர் நவவெள்ளி. இத்தொடர் கடந்த ஜூன் 30-ம் தேதி முதல் ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
உலகில் வாழும் மனிதர்களுக்குத் தன் மேல் நம்பிக்கையையும், பக்தியையும் கொடுத்து, கெடுதல் செய்யும் தீயவர்களுக்குத் தண்டனை கொடுத்து அதன் மூலம் மக்களுக்கு நம்பிக்கையளிக்க அம்மன் ஆதிபராசக்தி நடத்தும் திருவிளையாடல்களில் ஒன்றே இந்த நவவெள்ளி.
![Simran Simran](https://www.nilacharal.com/wp-content/uploads/2008/07/simran31.jpg)
இறையாளும் ஆதிபராசக்தியைப் போலவே தானும் உலகை ஆளும் சக்தியாக அவதாரமெடுக்க நினைத்த ஒரு அற்ப மனிதனின் கதை இது. ஒரு சாதாரண மனிதன் தெய்வ ரகசியத்தை தெரிந்து கொண்டு உலகை ஆளும் சக்தியைத் தன் வசமாக்கிக் கொள்ள நினைக்கிறான். அம்மன் தனது தீவிர பக்தையான உமா மகேஸ்வரியின் மூலமும், அவளுடைய மகளான காயத்ரி தேவியின் அம்சமாக வெளிப்பட்டும் தனது சக்தியை நிரூபித்து மமதை பிடித்த அந்த மனிதனை எப்படி அடக்குகிறாள் என்பதை புதுமையாகச் சொல்கிறது நவவெள்ளி தொடர்.
![Simran Simran](https://www.nilacharal.com/wp-content/uploads/2008/07/simran21.jpg)
இதுவரையிலும் இல்லாத புதுமையாக, புது சிம்ரனை இக்கதையில் நேயர்கள் காணலாம். சிம்ரன் சினிமாவில்கூட இதுவரை தான் செய்திராத அம்மன் வேடத்தில் சின்னத்திரை ரசிகர்களுக்கு தரிசனம் தருகிறார். கூடுதலாக, தசாவதாரத்தையும் மிஞ்சி 14 வேடங்களில் அசத்தியிருக்கிறார். இத்தொடர் சிம்ரனின்நடிப்புப் பாதையில், ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
![Simran Simran](https://www.nilacharal.com/wp-content/uploads/2008/07/simran11.jpg)
இத்தொடரில் சிம்ரனுடன், பூவிலங்கு மோகன், O.A.K.சுந்தர், அனுராதா கிருஷ்ணமூர்த்தி, சுப்புலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பவர் செல்வபாண்டி. ஆசாத் ஒளிப்பதிவு செய்ய, அரவிந்த்ராஜ் இயக்கியிருக்கிறார். தொடரின் கிரியேட்டிவ் ஹெட் சுபா வெங்கட்.”
very nice