இடமாற்றம் (1)

கார் போய்க்கொண்டிருந்தது. இப்பவும் கூட அப்பாவுக்கு நெடுஞ்சாலை குறுக்கே ஊருக்குள் நுழைய எங்கே காரைத் திருப்ப வேண்டும் என்பதில் திணறல்தான். அரசியல்வாதி ஒருவர் பற்றிய தெரு விளம்பரம், ஒவ்வொரு எழுத்தாய் உயர உயரமாய் அரையாள் அளவு பேர் எழுதியிருக்கும். எங்கள் ஆருயிர் அண்ணனே வருக வருக… இடப்பக்கம் ஒரு சின்ன டீக்கடை ஆருயிர் அண்ணன் வந்தால் டீ சாப்பிடுக, என்று தருவார்களா யிருக்கும். சுவருக்கும் டீக்கடைக்கும் நடுப்புற சின்னச் சந்தில் காரை வலப்பக்கம் ஒடித்து நெடுகப்போனால் ரயில்வே கேட் தாண்டி, சாலையை ஒட்டி, ஆட்டுக்கிடை போட்டமாதிரி, சிறு கும்பல்வீடுகள் தாண்டி வயல்வெளி. உயரம் பண்ணிய மேட்டுப் பாதை. ரெண்டு பக்கமும் வெள்ளாமையில்லாமல் கரடுதட்டிக் கிடக்கிறது. படித்துறை வைத்துக் கட்டிய ஒரு வறண்ட குளம்… ஆலமரத்தடியில் உயர்த்திப் பிடித்த அரிவாளுடன், முகம் மழுங்கிய விக்கிரகம். சருகுமாலை. டாய், நான் யார்னு பார்த்தே, என்று குடிபோதையில் வீராப்பு பேசுகிறாப் போல…

ஒரு பஸ் போகிறஅளவு சரளை ரஸ்தா. மழை பெய்தால் தெருவே கசகசவென்று கனலாய்ச் சிவந்து கிடக்கும். நடக்க இயலாது. வழுக்கும். குண்டும் குழியும் பெயர்ந்து அமுங்கிக் கிடக்கும். ”எப்பிடி இங்கபாத்து இடம் வாங்கினே அப்பா…” என்று வழக்கம்போல சவிதா சலித்துக்கொண்டாள். என்றாலும் அவளுக்குத் தெரியும் அப்பாவின் கனவு இல்லம் இது. சாதாரண குமாஸ்தா வேலையில் இருந்து துவங்கி, தந்தை தவறிப்போக, கடன்வாங்கி, சகோதரி ஒருத்திக்குத் திருமணம் முடித்துக்கொடுத்து நிமிர்ந்தபோது, முன்தலைமயிர் பின்வாங்க ஆரம்பித்திருந்தது. தனக்கு கல்யாணமே ஆகாது என நினைத்திருந்தார். கல்யாணமும் ஆகி சவிதாவும் பிறந்து இப்போது… ஆ, சொந்தமாய் வீடு!

”எல்லாம் நீ பொறந்த அதிர்ஷ்டந்தாண்டி… செல்லம்” என்று அவளைக் கொஞ்சுவார். வெளியே எங்கே போனாலும் வரும்போது சவிதாவுக்கு என்று எதும் வாங்கிவருவார். வங்கியில் கல்விக்கடன் தருகிறான் என்று அசராமல் அவளை இன்ஜினியரிங் படிக்க அனுப்பியிருக்கிறார். அப்பாவிடம் இப்போது ஒரு நிமிர்வு கண்டிருக்கிறது. பேச்சில் ஒரு உறுதி வந்திருக்கிறது. அலுவலகத்தில் பதவியும் கௌரவமும் உயர்ந்திருக்கிறது. பெட்ரோல் செலவு தருகிறார்கள் என்றதும் காரோட்ட கற்றுக்கொண்டு பழைய கார் ஒன்றை வாங்கினார். முதல் காரியமாக பின் கண்ணாடியில் ஸ்ரீ அரவிந்த அன்னையின் சின்னம்… விரித்த தாமரை இதழடுக்குகளை மேலிருந்து பார்க்கிறாப் போன்ற லச்சினையை ஸ்டிக்கர் பதித்தார். தெருவில் நிற்கிறது கார் என்றதும்தான் அப்பாவுக்கு சொந்தமாய் இடம் வாங்கும் உந்துதல் கிளம்பியிருக்க வேண்டும். அதுவரை நகரத்தின் மையத்தில் வீடு என்பது வசதியாய்ப் பட்டிருந்தது போலும்.

”எங்க போனாலும் ராத்திரி இருட்டறதுக்குள்ள இங்க வந்து அடைஞ்சாகணும்…” என்றாள் பார்வதி. கூடைக்கோழி போல உணர்ந்தாளோ என்னவோ. என்னதான் பணத்தேவை இருந்தாலும் அப்பாவுக்கு மனைவி சம்பாதித்துக் கொண்டுவர வேண்டும் என்று யோசனை இல்லை. பணம் என்பது குதிரைமுன் நீட்டப்பட்ட கொள்ளாய் எப்பவும் நம்மை நுரைதள்ள ஓடவைத்து விடுகிறது.

பணமா முக்கியம், நல்ல குணவானா, புத்திசாலியா இருக்கணும்… என்பது அவர் அப்பா வாக்கு. பணம் சம்பாதிக்கிற சாமர்த்தியம் இல்லாததால் அது வந்திருக்கலாம்… நெல்லைப்போட்டு நெல்லை விளைவிப்பது போல, பணத்தை எறி. பணத்தை அறுவடை செய்… என்ற சித்தாந்தங்கள் உவப்பாகாத குடும்பம். எல்லாம் கிரகச்சாரப் பலன். என்றாலும் விதியை மதியால் வெல்லலாம்… என்று உள்ளே குழம்பிக் கிடக்கிற நடுத்தர வர்க்கம்.

தன் பிறந்தவீட்டை விட இங்கே பெரியசுற்றில் வளையவர வேண்டும் என்பது அம்மாவின் எடுப்பாய் இருந்தது. அதுதான் பிறந்தவீட்டில் நமக்குப் பெருமை என நினைத்தாள். இந்தக் காலத்தில் அவள்அப்பாவுக்கு அஞ்சு குழந்தைகள். அவள் அஞ்சாவது. பெண். ”எதோ எனக்குத் தக்ன கௌரவத்தோட கல்யாணம் பண்ணித் தர்றேன், பெரிசா பண்ணணும்னு ஆசைதான்…” என மாமனார் சொன்னபோது, கணேசன் நெகிழ்ச்சியுடன் அவர் கையைப் பிடித்துக்கொண்டான். அவரிடத்தில், இழந்த தன் தந்தையையே பார்த்தான் போல. ”உங்க ஆசிர்வாதம் போதும்,” என்று அப்பா சொல்லியிருக்கலாம்… என நினைத்துக்கொண்டாள் சவிதா.

பெரியவாளானா உங்க ஆசிர்வாதம், சின்னவாளானா நீ பிறந்த அதிர்ஷ்டம்… என அப்பா நெகிழ்ந்துவிடுகிறார். சே! ரொம்பத்தான் கலாய்க்கிறோம், என தலையை உதறிக்கொண்டாள். அம்மாவுக்கு நல்ல சாரீரம். சில சமயம் சமையலறையிலோ குளியலறையிலோ, திடுமென்று தன் உள்ளே பொங்கும் அலையெழும்பலில் பாட ஆரம்பித்து விடுவாள். ரேடியோ பாடினால் கூட அடுத்த வரி தன்னைப்போல வாயில் கிளம்பும். சிவாஜி பாடும் சோக கானங்களின் ரசிகை. கிராமங்களில் இழவுவீடுகளில் வரிசையாய்ப் போட்டுவிடுகிறார்கள்.

வத்திராயிருப்பு பிறந்த பூமி. வாக்கப்பட்டது மயிலாப்பூர். கபாலிஸ்வரர் கோவிலையும் அதன் குளத்தைச் சுற்றிய நாலு வீதியையும் ஒரு சுத்து சுத்தினால் பொழுது றெக்கை கட்டி பறந்துவிடும். எத்தனை விதமான ஜனங்கள். கடைகண்ணிக்குப் போய் சாமான்களை விலைபேசி வாங்குவதே ஒரு சந்தோஷமான சமாச்சாரம் தான். வரவர ஷாப்பிங் கல்ச்சரே உருவாகியிருக்கிறது. பாரதிய வித்யா பவன், லேடி சிவசாமி ஆடிட்டோரியம், பி.எஸ். மேல்நிலைப் பள்ளி என்று வாரத்தில் எப்படியும் நாலு நிகழ்ச்சிகள்… கச்சேரிகள், ஆன்மிகச் சொற்போழிவுகள். சனி ஞாயிறுகளில் நிச்சயம் கலகலப்புக்குக் குறைவில்லை. புத்தக வெளியீடுகள், பரத நாட்டிய அரங்கேற்றங்கள், முழுக்க சொந்தக்காரர்களே முன்வரிசையில் அமர்ந்து அவ்வப்போது கைதட்டுகிறார்கள். வேற இடம் கிடைக்கவில்லையா என்ன, எப்போதும் இறந்த எழுத்தாளருக்கு ரானடே ஹாலில் நினைவுக் கூட்டம்…சின்னஞ் சிறுசுகள் கல்பலதிகா, பிருந்தா மாணிக்கவாசகம், ஸ்ரீரஞ்சினி, பிரியம்வதா, மாளவிகா, அபிஷேக், கீபோர்ட் சத்யநாராயணன் என்று பொலிந்து வரும் இளம் கலைஞர்கள் கச்சேரி கேட்கலாம். என்ன தைரியமா மேடையேறி எத்தனை ஜோராய்ப் பாடறதுகள். சவிதாவுக்கும் பாட்டு சொல்லிக் கொடுத்துப் பார்த்தாள். அவளுக்கு பற்றிக்கொள்ள வில்லை. கீதை வகுப்புகளுக்கு மாத்திரம் பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் சவிதா போய்வந்தாள்.

அலுவலகம் முடிந்து அப்பா திரும்ப அநேகமாய் ஏழெட்டு மணி ஆகிவிடுகிறது. அப்பாவை அநேகமாக வரவேற்பது சவிதாதான். அப்பா வந்து உடைமாற்றிக் கொண்டு தொலைக்காட்சி பார்ப்பார். பெண்ணே பெண்ணை பழிவாங்கும் எதாவது தொடர் ஓடிக்கொண்டிருக்கும். தொடரைவிட விளம்பரங்களை அப்பா விரும்பிப் பார்ப்பார். அடுத்த பத்திருபது நிமிஷத்தில் அம்மா வந்து தோசைக்கல்லைப் போட்டு சூடாய் தோசை வார்த்துக்கொடுப்பாள் அப்பாவுக்கு. அவர்கள் வீடு சிறியது. மயிலாப்பூர்தான் வேணும் என்று அப்பா இருந்ததாகப் பட்டது. ஒரு படுக்கையறை. இந்தப் பக்கம் ஒடுங்கினாப்போல குளியல்-கழிவறை இணைந்து. நீளவசத்தில் ஒரு சமையல் பகுதி. கூடத்தில் இருந்து ஒரு பக்கமாய் கதவு இன்றி. கூடத்தின் சுவரிலேயே அலமாரியில் புத்தகங்கள், திணிக்கப்பட்ட படுக்கை, பெட்டிகள், மேலே சேந்தியில் பெரிய வெண்கல, அலுமினியப் பாத்திரங்களை மூட்டைகட்டி, விநோதமான உருவமாய்க் கிடக்கும். சரித்திரப் படங்களில் இப்படி சாக்குமூட்டையில் போட்டு ஆளைக் கடத்திப் போவார்கள். கடைசியில் யாரைக் கடத்த வேண்டுமோ அவளை விட்டுவிட்டு வில்லன்மனைவியையே கடத்திக் கொண்டுவந்து வில்லனிடம் விடுவார்கள்… திறந்து பார்த்தால், ”அத்தான்!” – ”அப்படிச் சொல் பெண்ணே. இந்த சத்தான வார்த்தையிலே செத்தான் கருணாகரன்!”

காலை ஏழு மணிக்குள் சவிதா ஓட வேண்டும். அம்மா சமையல் கூடத்தில் பரிதவிக்க, அப்பா அவளுக்கு டிஃபன் பாக்ஸ் கட்டுவார். ”ஐயோ என் ரெகார்டு நோட்டு!”… ”நீ தலையை வாரிக்கோ இவளே. நான் எடுத்துத் தரேன்” என்பார் அப்பா. தெருவிறங்கி ஐந்து நிமிட நடை. சித்திரக்குளத்தருகே கல்லூரி பஸ் வரும். ”அப்பா போயிட்டு வரேன்…” ”ஹ்ம்…” என்பார் மூச்சிறைக்க.

”இடம் வாங்கறது சரி, நமக்குன்னு கடைசி காலத்துக்கு வேணுன்றது சரி… இப்பசத்திக்கு நாம கட்டி அதை வாடகைக்கு விட்றலாம்…” என்றாள் பார்வதி. அப்பாவின் முகம் மாறிப்போயிற்று. காலை வெயில் வர வெளி வராந்தாவில் நாற்காலியைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து இந்து நாளிதழ் வாசிக்க அவர் ஆசைப்பட்டிருக்கலாம். அவர்அப்பா கிராமத்தில் வாழ்ந்த வாழ்க்கை அது. பள்ளிக்கூட ஆசிரியர். டிரான்சிஸ்டரை வாசல் திண்ணையில் உரக்க வைத்து ஆங்கிலச் செய்திகள் கேட்பது… காலையில் வாசலில் அமர்ந்து நாலு பேர் பார்க்க செய்தித்தாள் வாசிப்பது, ஒரு அடையாளம். நாலெழுத்து படிச்சவர் இல்லையா? தாளை மடித்துவிட்டு புன்னகையுடன், ‘ஹிஸ்டரி ரிபீட்ஸ் இட்செல்ஃப்’… என்று, இலவச பேப்பர் படிக்க வந்த நபரிடம் எதாவது பேசுவார். பெரிய வருமானம்னு இல்லாவிட்டாலும், வாத்தியார், போஸ்ட்மாஸ்டர் என்றால் ஊரில் மதிப்பு. ஒழுக்கத்தின் பிரதிநிதிகள். இவர்கள் சம்சாரங்கள் கோவில்களிலும், சுமங்கலி பூஜைகளிலும் பிளவுஸ் பிட், வெற்றிலை பாக்குடன் கொண்டாடப்படுகிறார்கள்.

வித்தியாசமான கார். வாங்கும்போதே ஹாரனைத் தவிர எல்லாத்திலிருந்தும் சத்தம் வந்தது. ”ஹாரன் தனியா அடிக்க வேண்டியதில்லை…” என்று அப்பா புன்னகைத்தார். ”நீ தலையெடுத்து புதூ கார் வாங்கிக் குடுடி அப்பாவுக்கு” என்றார் விடாமல். ஒரே பெண் என்பதில் அபார செல்லம். சவிதாவுக்கு வாயை வளர்த்து விட்டாச்சி, என்று பார்வதிக்கு அங்கலாய்ப்பு உண்டு…

(மீதி அடுத்த இதழில்)

About The Author